தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடதிட்டம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடதிட்டம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வில் பொதுத்தமிழ் பாடம் நீக்கப்பட்டது என்று தவறாக சித்தரிக்கப்படுவதாக கருத்து எழுந்துள்ளது. ஆனால் தமிழ் தெரியாதவர்கள் குரூப்-2 , 2-A தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்கிற நிலையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடதிட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் பாட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்க்கவும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்க்கவும் முதன்மைத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்காக வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 25 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.

அப்படி தேர்வு பெறாதவர்களின் அடுத்த தாள் திருத்தப்படாது, அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள் மட்டுமே குரூப்-2 தேர்வு எழுத முடியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழை கட்டாயம் படிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வாணையத் தரப்பு விளக்கம் :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி II மற்றும் IIA அதாவது, நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வாக, அதாவது, முதல்நிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத்தேர்வு கொண்டவையாக மாற்றியுள்ளது.

இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரையமும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டுமுறை தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. எனவே இரண்டு தெரிவுகளுக்கும் ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம்- தமிழுக்கும் தமிழகத்திற்கும் முக்கியத்துவம் இதுநாள் வரை தொகுதி II மற்றும் IIA முதனிலை (Prelims) தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தேர்வாக முடியும்.

அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளன.

முதனிலைத் (Prelims) தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மைத் (Mains) எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.

முதனிலைத் (Prelims) தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு, அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம், சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக திருக்குறளுக்கு தனியே முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சமூக நீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள், சமூக நல்லிணக்கம், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற தமிழகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

மேற்படி தெரிவுகளில் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், கண்டிப்பாக தமிழக வரலாற்றையும் தமிழ் மொழியையும் அறிந்தவர்களாகவும், தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேர்வாணையம் கருதுவதால், மேற்படி தெரிவின் முதன்மைத் (Mains) தேர்வில், தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு; ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பு; சுருக்கி எழுதுதல்; கட்டுரை எழுதுதல் ; குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல்; திருக்குறள் பற்றி கட்டுரை, அலுவலகக் கடிதம் எழுதுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக வரலாற்றுக்கும் முக்கியத்துவம்:

முதன்மை எழுத்துத் தேர்விலும், தமிழுக்கும், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரும் வகையில் தமிழர் நாகரீகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழகத்தின் இசைப் பாரம்பரியம், நாடகக் கலை, பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. என தேர்வாணைய தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: