கலையூரில் தொல்லியல் ஆய்வு கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

கலையூரில் தொல்லியல் ஆய்வு கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி என அடுத்தடுத்து தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கலையூரில் தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில தொல்லியல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியரான சரவணன், பரமக்குடி வைகை ஆற்றின் அருகே உள்ள கலையூர் பகுதியில் நடந்த குடிமராமத்து பணிகளின்போது முதுமக்கள் தாழி, பளபளப்பான மண் கலையங்கள் ஆகியவற்றை மீட்டெடுத்துள்ளார். இதை ஆய்வு செய்த கடல்சார் தமிழியல் ஆய்வாளர் ஒடிசா பாலு, ”கலையூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்கள் 2,000 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம், மோர்ப் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வைகையாற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமம் கலையூர். இங்கு பராமரிப்புப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது, முதுமக்கள் தாழி மற்றும் பழைமையான ஒரு மனிதனின் பல், மற்றும் சுடுமண் சிற்பம் போன்ற பல பொருள்கள் கிடைத்தன.

இந்த அரிய வகை பொருள்கள் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதேபோல வைகையாற்றங்கரையில் அமைந்துள்ளதும் இந்தக் கலையூரிலிருந்து 50 கி.மீ தூரம் மட்டுமே உள்ள கீழடியில், பண்டைய நாகரிகத்ததை வெளிப்படுத்தும் வகையில் பல பழைமையான பொருள்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருள்கள் சங்க காலத்தில், எழுத்து நாகரிகம் இருந்தது என்பதையும் பல மொழிகளுக்கும், நாகரிகத்துக்கும் முந்தையது தமிழ் என்பதை கீழடியில் நடந்து வரும் தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. இதேபோல் கலையூரில் இருந்து கிழக்குப் பகுதியில் சுமார் 50 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அழகன் குளத்திலும் ஏராளமான அரிய வகை கலைப் பொருள்களும் கிடைத்துள்ளன.

இதுபோன்ற ஆய்வுகள் நமது பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே, தற்போது அரிய பொருள்கள் கிடைத்துள்ள கலையூர் ஊரணி பகுதியிலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொல்லியல் ஆய்வுகள் நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இந்த அரிய வகை பொருள்கள் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதேபோல வைகையாற்றங்கரையில் அமைந்துள்ளதும், இந்தக் கலையூரிலிருந்து 50 கி.மீ தூரம் மட்டுமே உள்ள கீழடியில், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: