![](https://worldtamilforum.com/wp-content/uploads/2020/03/keezhadi-excavation-13-03-2020.jpg)
கீழடியை, கொந்தகை தொடர்ந்து அகரம், மணலூரிலும் அகழாய்வுப் பணிகள் துவக்கம் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன.
கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்ததைத் தொடர்ந்து அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருள்கள் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதும் கிடைக்கப்பட்ட பொருள்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்படும்.
இந்நிலையில், 19.2.2020 அன்று கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. கீழடி மட்டுமன்றி கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது.
ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியில் மட்டுமே நடைபெற்ற நிலையில், உலகத் தமிழர்கள் வியந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட நீர் நிலை பராமரிப்பு, செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியை அறியும் வகையிலும் பண்டைய தமிழர்களின் வாழ்வியல், இன மரபியல், மனிதர்களின் நம்பிக்கை, கலாசாரம் ஆகியவற்றை அறியும் வகையிலும் கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களிலும் விரிவான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி கீழடி, கொந்தகை பகுதியில் நடைபெற்ற நிலையில் தற்போது அகரம் பகுதியில் தொல்லியல் எச்சம் கண்டறியப்பட்ட 2 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போது முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
அகழாய்வில் 10 அடி நீளம் கொண்ட சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், 5 மண் பானைகள், 3 மண் குடுவைகள், இரண்டு முதுமக்கள் தாழி அமைப்பிலான மண் குடுவைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு மீட்டர் சுற்றளவு கொண்ட குடுவை முதுமக்கள் தாழியாக இருக்கலாம் எனவும் அவற்றினை சில தினங்களில் முழுமையாக ஆய்வு செய்து உறுதிபட தெரிவிக்க முடியும் எனத் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த வாரம் அகரம் பகுதியில் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வுதான் அனைவரின் கவனத்தையும் பெற்றது. இதனால் ஆறாம் கட்ட அழாய்வுப் பணியைத் தமிழக தொல்லியல்துறை மிக முக்கியமானதாக கருதி விரைவுபடுத்தி வருகின்றனர்.