தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை!

தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 2010-ம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

இச்சட்டத்தின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை தமிழ்வழி கல்வி மூலம் பயின்று இருக்க வேண்டும். மேலும் 10-ம் வகுப்பு தகுதியுள்ள அரசுப் பணிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இருந்த சட்டத்தில், இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்க அவசியம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இனி தமிழ்வழியில் கல்வி பயின்றால் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும்.

2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவும் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின்படி, தேர்ச்சிக்கான மதிப்பெண் 35-லிருந்து 45 ஆக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: