சிவகங்கை அருகே 745 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை:சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டை சேர்ந்த சரவணன், சூரக்குளத்தில் பழமையான கல்வெட்டு இருப்பதாக தொல்நடை குழுவிற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசா, பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘சூரக்குளத்தில் இருந்து நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில், இடிபாடுடன் கூடிய நான்கு கால் மண்டபத்தில் தெற்குப்பகுதியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. சுமார் நான்கரை அடி நீளத்தில் ஒரு அடி அகலத்தில் ஐந்து வரிகளை கொண்டுள்ளது. இந்த மண்டபம் முந்தைய காலத்தில் இவ்வழியில் செல்வோருக்கு இளைப்பாறும் மண்டபமாக, நீர் அருந்தும் இடமாக இருந்திருக்கலாம்.

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கிபி 1268 முதல் 1311 வரை ஆட்சி செய்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கல்வெட்டு 1275ம் ஆண்டு வெட்ட பெற்றதாக கொள்ளலாம். கோமார பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள், குலசேகர தேவர்க்கு ஏழாம் ஆண்டு முடிகொண்ட சோழபுரத்தில் உள்ள திருச்சிவனமுடைய நாயனார் கோயில் தானத்தார் எனும் கோயில் அலுவலர்கள், இவ்வூரைச் சேர்ந்த உய்யவந்தான் எட்டி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை, அவர்கள் இறைவனுக்கு தேவதானமாக விட்டுக் கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. இது துண்டு கல்வெட்டாக உள்ளது. இக்கல்வெட்டில் கோயில் தானத்தார் என வருகிறது. தானத்தார் என்பவர் கோயிலை நிர்வகிப்பதற்காக அரசர்களால் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். கோயில் நிர்வாகம் நிலம் தொடர்பான பழமையான பல கல்வெட்டுகளில் தானத்தார் என்கிற சொல் காணப்படுகிறது’’ என்றனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: