![சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்!](https://worldtamilforum.com/wp-content/uploads/2018/12/civil-service-exam-tamil-nadu-candidates.jpg)
சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்!
மத்திய குடிமைப்பணி தேர்வாணையம், அகில இந்திய குடிமைப்பணிக்கான சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு முடிவுகளை இன்று (20.12.2018) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 1994 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 131 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்றழைக்கப்படும் மத்திய குடிமைப் பணி தேர்வாணையம், இந்திய அளவில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப் எனப் பல மிக முக்கிய பணிகளுக்குத் தகுந்த திறமையானவர்களை நியமிக்க ஆண்டுதோறும் மூன்று கட்டமாகத் தேர்வை நடத்தி வருகிறது.
முதல் கட்டமாக, ஜூன் 3-ம் தேதி நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வில் ஆறு லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதியுள்ளனர். இந்தத் தேர்வில் 10,468 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் இரண்டாவது கட்டமாக அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் 1,994 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து 131 பேர் தேர்வாகி அசத்தியுள்ளனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 4-ம் தேதி நடக்கவுள்ளது. நேர்முகத்தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாக உள்ளது.