பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்பது உண்மையா?

 பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்பது உண்மையா?

பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்பது உண்மையா?

தமிழ் எழுத்துகள் திடீரென உருக்கொண்டவையல்ல. சமூக வளர்ச்சிப் போக்கில் இவ்வெழுத்துகள் தேவை கருதி உருமாறி வளர்ந்திருக்கின்றன. கற்பாறையிலும், அதன் பிறகு பனை ஓலையிலும் எழுதப்பட்ட எழுத்துகள் அதனதன் தேவைக் கேற்பவும், விரைவாக எழுதுவதற் கேற்பவும், ஓர் எழுத்துக்கும் பிரிதொரு எழுத்துக்குமிடையே ஒன்று போல கருதும் எழுத்து மயக்கம் ஏற்பட்டு விடாதபடியும் எழுத்துகளின் வடிவங்கள் உறுதி செய்யப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இன்றைக்கு நம் பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் கால வளர்ச்சியில் மக்கள் பயன்பாட்டுத் தேவைக்கேற்ப வளர்ந்த வரிவடிவங்களாகும்.

19ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களின் வருகையாலும், இன்ன பிற காரணங்களாலும் எழுத்துச் சீர்திருத்தம் கோரி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

1915 ஆம் ஆண்டில் பாரதியாருக்கும், வ.உ. சிதம்பரனாருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றம் முதன்மையான ஒன்றாகும். அதே ஆண்டில் சுப்பிரமணிய சிவா நடத்திய ‘ஞான பாநு’ ஏட்டில், ‘தமிழ் எழுத்துகள்’ என்ற தலைப்பில் வ.உ.சி. எழுதிய கட்டுரை ஒன்றில், இக்காலத்திலே (ஓணான் சுருட்டிய வால் போன்று உள்ள எழுத்துகள்) எழுதப்படும் எழுத்துகளுக்கு மாற்றாக றா, றோ, னா, னோ, என்று எழுத வேண்டும் என்று சிலர் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

1930 இல் காரைக்குடியில் இருந்து வெளி வந்த ‘குமரன்’ இதழில் அதன் ஆசிரியர் திரு. முருகப்பா என்பவர் ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களை பயன்படுத்தி கட்டுரையொன்றை எழுதி வாசகர்களின் கருத்தை கேட்டுள்ளார்.

1931இல் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து பொறியியல் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்பவரும் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கால கட்டத்தில் தான் குத்தூசி குருசாமி அவர்கள் முன்மொழிந்திட பெரியாரும் எழுத்துச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியதோடு, தனது ஏடுகளில் தமிழில் உள்ள சில எழுத்துகளை மாற்றம் செய்து வெளியிட்டார்.

பெரியார் வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் எழுத்து சீர்திருத்த சிந்தனை பிறந்தது என்று கூறுவது தவறானதாகும்.

பெரியார் தனது குடியரசு, விடுதலை ஏடுகளில் எழுதி வந்தவை எழுத்து குறைப்பே அன்றி எழுத்துச் சீர்திருத்தம் அல்ல, அதுவும் கூட தமிழின் பழைய எழுத்து வரிவடிவமேயன்றி புதியன அல்ல. இதற்கு கல்வெட்டு சான்றுகளும் உள்ளன. கவிமணி தேசிக விநாயகர் நாஞ்சில் நாட்டு கல்வெட்டுகளை இதற்கு சான்றாக கூறியிருப்பதாக தனித் தமிழியக்க மூத்த அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு:

க், ங், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ், ற், எனும் பதினான்கு மெய்களும் ஐகாரம் ஏறக் கை, ஙை, சை, என்றாயின.

ஐகார அடையாளமாக இரட்டைச்சுழி அமைக்கப்பட்டு வந்தன.

அப்படியே ண. ல. ள. ன, என்னும் நான்கு எழுத்துகளும் ணை, லை, ளை, னை என்று இரட்டைச்சுழி துணை எழுத்தோடு எழுதப்பட்டன.

இந்த நான்கு எழுத்துகளும் மற்றைய எழுத்துகளில் வேறுபட்டவை.

சுழிகளால் அமைந்தவை. ‘ண’ மூன்று சுழி.

‘ல’ ஒரு சுழி.

‘ள’ ஒரு சுழி.

‘ன’ இரண்டு சுழி.

இச்சுழி எழுத்துகளோடு இரண்டு சுழித்துணை எழுத்து ஒட்டும் போது,

(ணை) மூன்று சுழி ஐந்து சுழியாகவும்,

ஒரு சுழி (லை) மூன்று சுழியாகவும்,

ஒரு சுழி (ளை) மூன்று சுழியாகவும்,

இரண்டு சுழி (னை) மூன்று சுழியாகவும் மாறி விடும் அல்லவா?

இச்சுழிகளுள் ஒவ்வொன்றைக் குறைக்கும் வகையால் மேலே துதிக்கையாக்கினர்.

‘வ’ என்பது சுழியுடைய எழுத்தாக இருப்பினும், அதற்கு துதிக்கை இட்டால் லகரத்தோடு மயக்கம் ஏற்படுத்தும் என எண்ணி மற்றைப் பதின்மூன்று எழுத்துகள் போல் வைத்துக் கொண்டனர்….

‘கா’ முதலிய நெடில்களின் கால்கள் ண, ற, ன, என்பவற்றில் சுழியாக இருந்தன.
அவற்றை மற்ற எழுத்துகளின்படியே கால் இட்டு எழுதுதல் புதிதாகத் தோன்றவில்லை.

பெரிய சீர்திருத்தமாகவும் படாமல் இயல்பாக இருப்பவையாயின.

பெரியார் மேற்கண்ட பழைய வரி வடிவ எழுத்துகளோடு நில்லாது ஐ, ஒள, விலும் மாற்றம் செய்திட்டார். அவற்றை அய், அவ், என்றே எழுதினார்.

உயிர் எழுத்தை நீக்கி விட்டு உயிர்மெய்யை வைத்துக் கொள்வது குழப்பத்தையே தரும்.

அதாவது ‘ஐ’ என்ற உயிர் இல்லாமல் தலை, மலை, மனை முதலிய உயிர்மெய்கள் எவ்வாறு வரும்?

மேலும் கய், தய்யல், பிழய், மழய், என்று எழுதியதோடு,

வந்தான்= வன்தான்,

மாங்காய்= மான்காய்,

பஞ்சம்= பன்சம் – என்றெல்லாம் பெரியார் எழுதத் தொடங்கினார்.

அதுமட்டுமின்றி, நண்பரை Fரண்ட்ஸ் என்றும், வரிக்குதிரை என்பதை Zப்பிரா என்றும் ஆங்கில எழுத்துகளை தமிழோடு கலந்து துணிந்து எழுதிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் எழுத்துகளை அறவே அகற்றிவிட்டு முழுவதும் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறினார்.

1978இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சினங்கொண்டு “தமிழ்மொழியைப் பற்றி கவலைப்படாத நிலையில் தமிழ் எழுத்தைப்பற்றி மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

பாவாணரும் கூட 1937இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பெரியாருடன் தொடர்பு கொண்டு இறுதிவரை நெருங்கிப் பழகியும், அவர் ‘விடுதலை’ எழுத்தை மேற்கொள்ளும்படி சொல்லவோ, எழுதவோ இல்லை என்கிறார்.

தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுவதாக சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவார்.

பெரியார் வழியில் வீரமணி, வ.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தம் பேசிக் கொண்டே ஆங்கில மொழிக்கு பல்லக்கு தூக்கி வருவது கண்கூடான உண்மையாகும்.

தமிழின் தாழ்வுற்ற நிலை போக்காது எழுத்துச் சீர்திருத்தம் எவர் பேசினாலும் அவர் தமிழுக்கு எதிரி என்பதை இனியாவது தமிழர்கள் உணர வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: