முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் (மே 11, 1897) இன்று!

முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் (மே 11, 1897) இன்று!

முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் (மே 11, 1897) இன்று!

சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 – மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.

சுத்தானந்த பாரதியார் என பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். இவரின் முன்னோர்கள் ஆந்திராவை பூர்விகமாகக் கொண்டவர்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் இவர் அரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு சிவகங்கை அரசர் பள்ளிக் கூடத்தில் படித்து வந்தார். தானாகவே கற்று மெய்யுணர்வை வளர்த்துக் கொண்ட இவர் தெய்வசிகாமணிப் புலவரிடம் சேர்ந்து தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

தமது எட்டாம் வயதில் மதுரை மீனாட்சி அம்மையை தரிசித்து “அம்மா பரதேவி தயா பரியே” என்று முதல் கவி பாடத்தொடங்கினார்.

தனித்த ஆற்றல் பெற்றவராய் மாணவப் பருவத்திலே விளங்கியதால், இமயமலை மகான் ஒருவர் இவருக்கு தீட்சை வழங்கினார். அவர்தான் இவருக்கு “சுத்தா னந்தம்” என்று பெயர் சூட்டினார். பின்னர் சிருங்கேரி சங்கர மடத்தினர் “பாரதி” என்றும், சுவாமி சிவானந்தர் என்பவர் “மகரிஷி” என்றும் பட்டப் பெயர் அளித்து சிறப்பித்தனர். அது முதல் இவர் “மகரிஷி” என்றும், “கவியோகி” என்றும் பட்டப்பெயரோடு சுத்தானந்த பாரதி என்று அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு சுத்தானந்தர் பசுமலை கிறித்துவர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து உடலுறுதி, மனவுறுதி, நல்லொழுக்கம், நன்னடை ஆகிய சிறந்த வாழ்வியல் நெறிகளை போதனைகள் மூலம் கற்றுக் கொண்டார்.

பல நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் பேரார்வத்தோடு இருந்த சுத்தானந்தருக்கு நல் வாய்ப்பாக சிவகங்கை அரசர் கலாசாலையில் நூலகர் வேலை கிடைத்தது. அங்கு இருந்த மேலை நாட்டு அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு, உலக இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் ஆகியவை இவரின் கற்கும் திறனை வளர்க்க உதவி செய்தன. சிலகாலம் அங்கு பணிபுரிந்து விட்டு, காட்டுப் புதூர் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.

அப்போது பிரித்தானியருக்கு எதிராக இந்திய விடுதலைப் போர் காந்தியார் தலைமையில் நடைபெற்று வந்தது. அதில் ஈர்க்கப்பட்ட சுத்தானந்தர், “Freedom calls; no more walls” என்று விடுப்புக்கடிதம் கொடுத்து, விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். கதர்த்துணி விற்றல், மதுவிலக்கு பரப்புரை செய்தல், தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடுதல் போன்ற காந்தியாரின் சீர்திருத்தப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

காந்தியார் கைது செய்யப்பட்ட போது, பள்ளிக் கூடத்தை விட, சிறைக்கூடமே மேலானது என்று கூறி தமது ஆசிரியர் பணியைத் துறந்தார்.

ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் ‘பாரத சக்தி’ எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை.

திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

சென்னை, ஏழுகிணறு, நாகூர், நாங்குநேரி, பாபநாசம், ஈரோடு – கருங்கல்பாளையம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் நடைபெற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரித்தானியரின் அடக்குமுறைக்கு எதிராக முழங்கினார்.

வ.வே.சு. ஐயரின் ‘பாலபாரதி’ ஏட்டில் பெரும் பங்கு வகித்ததோடு, சமரஸ போதினி, சுயராஜ்யா, இயற்கை, தொழிற்கல்வி போன்ற பல்வேறு ஏடுகளில் கட்டுரைகள் எழுதி விடுதலை உணர்வை ஊட்டினார்.

சுத்தானந்தர் ஆன்மிக வாழ்வில் ஈடுபட்ட போதிலும், தமிழை முன்னிறுத்தியே இவரின் வாழ்வு பயணித்தது. இவர் பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கியதால், கவிதை, கட்டுரை, காவியம், புதினம், நாடகம், இசைப்பாடல்கள் என்று அனைத்து இலக்கிய வடிவங்களிலும் 1000க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ், இந்தி, பிரெஞ்சு, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, சமசுகிருத மொழிகளில் எழுதினார்.

திருக்குறள் இன்பம், இன்பத் திருப்புகழ், தமிழ்க் கனல், தமிழ் உணர்ச்சி, வீரத் தமிழர்க்கு ஆவேச கடிதங்கள், பைந்தமிழ்ச் சோலை, சிலம்புச் செல்வம், மணிமேகலை அமுதம், இனிய தமிழ் இலக்கணம், திருநூல், கல்விக்கதிர், கலைக்கோயில் ஆகிய நூல்கள் போற்றத்தகுத்தவை.

1930ஆம் ஆண்டு தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் திருக்குறளுக்கு உரையெழுதினார்.

திருக்குறள் தமிழரின் நாகரீகக் கண்ணாடி மட்டு மல்லாது, பேரின்பம் அனைத்திற்கும் வழி காட்டும் நூல் என்பதால், தமிழர்கள் இந்த முப்பாலைத் தாய்ப் பாலாகப் பருக வேண்டும் என்று திருக்குறள் இன்பம் நூலில் வேண்டுகோள் விடுத்தார்.

இலக்கிய உலகின் சிறந்த வரலாற்றுக் காப்பியமாக போற்றப்படும் சிலப்பதிகாரத்தை கதையாகவும், செய்யுளாகவும் எழுதாமல் கலை விளக்கக் களஞ்சியமாக படைத்தார். அதில் தமிழர்களின் நாட்டியக்கலை, இசைக் கலையின் சிறப்புகள் அற்புதமாக கூறப்பட்டுள்ளன.

மணிமேகலை பெருங்காப்பியத்தில் சங்கத் தமிழர் பண்பாடு குறித்தவற்றை 47 தலைப்புகளின் கீழ் எழுதி எளிய தமிழில் விளக்கமளித்தார். தமிழன்னை ஐம்பெருஙகாப்பியங்களை தமது அணிகலனாகக் கொண்டு திகழ்வதை தமது பாடல் மூலம் வெளிக் காட்டுகிறார்.

“காதொளிருங் குண்டலமும், / கைக்கு வளையாபதியுங் / கருணை மார்பின் / மீதொளிர் சிந்தாமணியும் / மெல்லிடையில் மேகலையும் / சிலம்பாரின்பப் போதொளிர் / பூந்தாமரையும் / பொன்முடி சூளாமணியும் / பொலியச் சூடி / நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் / தாங்கு தமிழ் நீடு வாழ்க!

தமிழிசையில் மிகச் சிறந்து விளங்கிய சுத்தானந்தர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழிசைப் பாடல்களை இயற்றினார். அவை புதுமைப் பாடல்கள், முருகன் அருள், கவியின்பக் கனவுகள், திருமணப்பாட்டு ஆகிய தலைப்புகளின் கீழ் தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. இவரது தமிழிசைப் பாடல்களை புகழ்வாய்ந்த இசைக் கலைஞர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, பி.யு. சின்னப்பா ஆகியோர் பாடி, இசைத்தட்டுகளாக வலம் வந்தன.

தமிழர் பெருங்கோயில்களில் தமிழில் அருச்சனை செய்து வழிபாடு நடத்துவதற்கு இன்றும் நம்மால் முடிவதில்லை. ஆனால் 1940ஆம் ஆண்டிலேயே தமிழ் அருச்சனைப் பாடல்களை “மந்திர மாலை”, “வேத சாதனம்” என்ற பெயரில் வெளியிட்டதோடு, கோயில்களில் இப்பாடல்களே முழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

தலை நிமிர் தமிழா – பெற்ற / தாயின் மனம் குளிர / மலை குலைந்தாலும் – தமிழா / மனங்குலையாதே! என 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் உற்சாகம் குன்றாமல் போராட வேண்டும் நோக்கில், எழுச்சிப் பாடல்கள் மூலம் தமிழர்களைத் தட்டியெழுப்பினார் ஓர் சந்நியாசி. அவர் பெயர் சுத்தானந்த பாரதி.

1938இல் தமிழகப் பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்ட போது, “தமிழன்” என்ற இன உணர்ச்சியோடு தமிழர்கள் போராடி வந்தனர். அப்போது சுத்தானந்தர் எழுதிய “தமிழுணர்ச்சி” நூல் மிகுந்த வரவேற்பைபெற்றது.

22 தலைப்புகளில் எழுதப்பட்ட அந்நூலிலே, தமிழ் மொழியானது முதல் மொழியாகவும், தொன்மை மொழியாகவும் விளங்குவதோடு, பின் தோன்றிய மொழிகளான வடமொழி, இந்திமொழிகளைக் காட்டிலும் நூறு மடங்கு இந்நாட்டில் முதன்மை பெறுவதற்கு தமிழ் மட்டுமே தகுதி படைத்த மொழியாக இருக்கிறது என்று தமது வீறு கொண்ட நடைமூலம் தமிழின உணர்ச்சியைக் கொட்டி எழுதினார்.

இந்தி எதிர்ப்புப் போர்ச்செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த அன்றைய “செந்தமிழ்ச் செல்வி” ஏட்டில் தொடர்ந்து ‘புதுக்கவி’ பகுதியில் கவிதை தீட்டினார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை முழங்கவும் அவர் தவறவில்லை.

“தமிழ்நாட்டுக் கல்விமுறை / தமிழர் கையில், / தாய்நாட்டுத் தொழில்க ளெலாந் / தனயர் கையில்; / தமிழர்வாணிபமெல்லாந் / தமிழர் கையில்; / தமிழ்த் துறையிலியங்குவது / தமிழர் கப்பல்; / தமிழ்ச் சமுதாயப் பணியுந் / தமிழர் கூட்டால்; தமிழ்நாடு தமிழர்க்கே; / தமிழர் சேமங் / தமிழர்களின் ஒற்றுமையே; / தமிழர் பேச்சு தனித் தமிழேயெனில் / வாழ்வு தழைப்பதாமே!

அன்றைக்கு தமிழ்ப் புலவர்கள் நடத்தும் கூட்டங்களில் இன்றைக்கு நாம் தமிழ்த்தாய் வாழ்த்தாகப்பாடும் பெ.சுந்தரனார் எழுதிய பாடல் பயன்படுத்தப்பட்டது. தற்போது நீக்கப்பட்டவரிகளாம் “கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமுந் துளுவும் உன்னு துரத் தெழுந்து” வரிகளும் சேர்த்து பாடப்பட்டது. இதைப் பாடுவதால் தமிழருக்குப் பயன் ஏற்படாது என்றும், ஆந்திரர்கள் ‘அரவான் அத்துவானம்’ என்று தமிழை இகழ்ந்து வருவதாகவும் நம்மிலிருந்து பிரிந்த மொழியினர் ஆரிய மொழியை போற்றி வருவதாகவும் வேதனையோடு குறிப்பிடவும் சுத்தானந்தர் தவற வில்லை.

பிரித்தானியரின் கல்விக் கொள்கையால் தமிழைப் புறக்கணித்து, ஆங்கிலத்திற்கு முதன்மை தரும்போக்கு தமிழர்களிடத்தில் அன்று நிலவியது. இதனை அவர் கடுமையாகக் கண்டித்ததோடு, தாசி கையில் வாளைக் கொடுத்து தாய்க்கழுத்தை அறுக்கச் சொல்வாயா? என்று கடுஞ்சொற்களால் சாடினார்.

அதுபோல், தாய்மொழி வழிக் கல்வி பற்றி கூறுங்கால், “ஒரு மனிதன் தன் இரைப்பையினால் மட்டுமே உணவை சீரணிக்க முடியும். அதுபோல் தாய் மொழியால் மட்டுமே அறிவை வளர்க்க முடியும்” என்று குறிப் பிட்டார்.

தமிழர்கள் மதமாகவும், சாதியாகவும் பிளவுபடாமல் தமிழராய் ஒன்றிணைய வேண்டும் என்பதிலும் நாட்டங் கொண்டவராய் சுத்தானந்தர் திகழ்ந்தார். எப்போதும் நான் தமிழன் என்றும், தமிழ்நாடு என் நாடு என்றும், நான் எங்கிருந்தாலும் தமிழர் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றும் தலை நிமிர்ந்து கம்பீரமாக உரத்துக் கூற வேண்டும் என்பார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஊடாக எழுந்த மொழிவழித் தமிழ்நாடு மாகாணக் கோரிக்கைக்கும் சுத்தானந்தர் ஆதரவு தெரிவித்தார். சென்னை மாகாணம் பம்பாய் மாகாணம் என்பதற்குப் பதிலாக ஆந்திரம், தமிழகம், வங்கம் என்றிருப்பதுதான் பொருத்தமானது என்றார். ஆந்திர தேசம், ஆந்திர மொழி என்பதில் ஆந்திரருக்கு ஒரு வீர உணர்ச்சி இருப்பது போல், தமிழ்நாடு, தமிழ்மொழி என்பதிலும் தமிழருக்கு அன்பு பிறக்க வேண்டும் என்றார்.

திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சித்தூர், சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களை இணைத்து ‘தமிழ்நாடு’ உருவாக்கப்பட்டு, அத்தமிழ்நாட்டிற்குத் தனி ஆட்சியும், அவ்வாட்சி தமிழரால் தேர்ந்தெடுக்கப் பட்டு தமிழ் அவையால் நடத்தப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1949இல் ஆந்திரர்கள் சென்னையை அபகரிக்க முயன்றபோது அதை கடுமையாக சுத்தானந்தர் எதிர்த்தார்.

“தமிழர் தனி உரிமை” என்ற தலைப்பிட்டு எழுதிய கட்டுரையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தமிழுக்கு ஆக்கம் கிடைத்ததைப் போல “சென்னை நமதே” இயக்கத்தால் தமிழர் தமது நாட்டைக் காக்க வீறு கொண்டெழ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழர் கூலிகளாகவும், குமாஸ்தாக்களாகவும், அடிமை வேலை செய்யாமல் தமிழ்நாட்டிற்கு உரிய தொழில், வாணிகம், அலுவலர்கள் முதலிய அனைத்து வேலைகளையும் கைப்பற்றி தமிழ்நாட்டை தமிழருக்கே உரித்தாக மாற்ற வேண்டும் என்று அழுத்தந் திருத்தமாக எடுத்துரைத்தார்.

“வீரத் தமிழருக்கு ஆவேச கடிதங்கள்” நூலில் , தனித் தமிழியக்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், மறைமலையடிகள், கா.சுப்பிரமணியனார், உமா மகேசுவரனார், இளவழகனார் எழுதும் தனித்தமிழ் நடை செவிக்கு இனிமையாக இருப்பதாக குறிப்பிடும் சுத்தானந்தர் தமிழ் தனித்து இயங்குமா என்று பலர் கேட்ட போது, இயங்கும் என்பதே எனது விடை என்றதாக தெரிவித்தார்.

இத்தாலிய மகாகவி தாந்தே, அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் ஆகியோரின் வரலாறுகளைத் தந்த தோடு, பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘லே மிசிரபிள் (Lay Missirable), லம்கிரி (Lomgiri) ஆகிய இரண்டு புதினங்களையும் ஏழைபடும் பாடு’, ‘இளிச்சவாயன்’ என்ற பெயர்களில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

சுத்தானந்தர் ஆங்கிலத்தில் எழுதிய 51 நூல்களில் தாயுமானவர் வரலாறும், திருவள்ளுவர் வரலாறும் அடங்கும். திருக்குறளுக்கு பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில உரைகள் இருப்பினும், இவரின் உரையே சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வள்ளலாரைப் பற்றி இந்தியில் நூலொன்றும் எழுதி அறிமுகம் செய்தார்.

1984இல் இவர் எழுதிய “பாரத சக்தி” பெருங்காவியம் சிறந்த படைப்பிலக்கியமாக அறிவிக்கப்பட்டு, இவருக்குத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் முதன் முறையாக மாமன்னன் இராசராசன் விருது வழங்கப்பட்டது.

1948 இல் சுத்தானந்தர் அரவிந்தர் ஆசிரமத்தை விட்டு விலகி, சில காலம் சென்னையில் தங்கினார். அங்கு யோக சமாஜத்தை நிறுவிய போதிலும், சரியாக செயல்படவில்லை. பின்னர் தாம் பிறந்த ஊரான சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் 1973இல் மீண்டும் யோக சமாஜத்தை நிறுவி செயல்படுத்தி வந்தார்.

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், “பாரத சக்தி மகாகாவியம்” அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும். சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.

தமிழின் வரலாற்றில் சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் 07.03.1990 அன்று காலமானார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: