நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரைத் தேவர்!

நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரைத் தேவர்!

நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரைத் தேவர்!

பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் ”செந்தமிழ்” என்னும் இதழ் வெளியிடவும், ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.

மூவேந்தரும் போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பாருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கி வரும் காலகட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்கு பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் மாசிக வாசிக பத்திரிகையை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினை திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார் பாண்டித்துரைத் தேவர்.

புகழ் பூத்த தேவர் மரபில் தோன்றிய பொன்னுசாமித் தேவருக்கும், முத்து வீராயி நாச்சியாருக்கும் மூன்றாவது மகனாக 1867ஆம் ஆண்டு பங்குனி 21 ஆம் நாள் பிறந்தார். பொன்னுசாமித் தேவரவர்கள் இராமநாதபுர மன்னருக்கு அமைச்சராகயிருந்தவர். இவர் சிறுவராக இருக்கும் போதே தந்தையை இழந்தமையால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். இக்காலகட்டத்தில் அழகர் ராஜ் என்ற தமிழ்ப் புலவர் இவரின் தமிழ் ஆசானாகவும் மற்றும் வழக்குரைஞர் வெங்கடேஸ்வர சாஸ்த்திரி இவரின் ஆங்கில ஆசிரியராகவும் இருந்தனர். இவர்களிடம் இருந்து மிக்க ஆர்வத்தோடு கற்ற தேவர், இரு மொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்று இராமநாதபுரத்தில் சிவர்டிஸ் என்ற ஆங்கிலேயாரால் நடத்தப்பட்ட உயர் பள்ளியில் மேல் கல்வி கற்றார்.

சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துக்கள் எல்லாம் இவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே ஒப்படைக்கப்பட்டன. இச்சொத்துக்களில் பாலவநத்தம் ஜமீனும் அடங்கும். இளம் வயதில் தமிழில் நல்ல தேர்ச்சியும் ஆர்வமும் பெற்றிருந்த தேவர், அதன் வளர்ச்சிக்காக தன் உடல், உயிர், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார் என்றால் மிகையாகாது. இக்காலகட்டத்தில் தேவரின் நெருங்கிய உறவினராகிய பாஸ்கர சேதுபதி அவர்கள் இராமநாதபுர அரியணையில் அமர்ந்து, இவரின் தொண்டுகளுக்கு துணை புரிந்தார் என்பர்.

அக்காலத்தில் அரிய தமிழ் நூல்களைக் கண்டெடுத்து, அவை அழியா வண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாதையருக்கு உதவும் பொருட்டு தேவர் அவர்கள், அவரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார். தனது ஆசிரியர் ஒருவரான இராமசாமிப்பிள்ளை என்றழைக்கப்படும் ஞான சம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார். பிற மதத்தவரின் சைவ எதிர்ப்புப் போக்கை மறுக்கும் விதமாக கோப்பாய் சபாபதி நாவலர் மூலம் மறுப்பு நூல்கள் வெளியிட்டார். மேலும் தண்டியலங்காரம் போன்ற சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களின் நூல்களுக்கும், தேவர் அவர்கள் பதிப்பிக்கும் பொருட்டு உதவி புரிந்திருந்தார். குமார சுவாமிப்புலவர், தேவரால் தொகுக்கப்பட்ட சைவமஞ்சரிக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம் இவரின் சிறப்பை நன்கு புலப்படுத்தும்.

சைவமஞ்சரி சிறப்புப்பாயிரத்தை கீழே காட்டுதும்:-

திக்குலவும் புகழாளன் பிரபுகுல சிகாமணியாய்ச் சிறந்த சீலன்
அக்கிரகண் ணியன்பொன்னு சாமியெனு நரபால னருளும் பாலன்
நக்கனடி யாவர்பாலன் பேறுளத்தன் வெண்ணீறு நண்ணும் பாலன்
தக்கபொரு ணிலவுகலை வினோதனுயர் சற்சங்க சனானு கூலன் .

பூதேவன் புகலியர்கோன் முதலறிஞர் தமிழ்நூலின் பொருள்க ளுள்ள
மீதேவன் பறமருவப் பதித்தேவன் றேவனெனும் வெளிறு நீங்கி
நீதேவ னெனக்கொண்டு நிலத்தேவன் பகைகடந்து நெறிநின் றீசன்
மாதேவன் பதத்தேவன் மகிழ் பாண்டித்துரைத்தேவ மன்னன் மாதோ

மதுரை மாநகரில் தேவர் தங்கியிருந்த போது, அவ்வூர் அறிஞர்கள் “தமிழ்ச் சிறப்பு” பற்றி சொற்பொழிவாற்றும்படி வேண்டிக் கொண்டனர். இதற்கு இணங்கிய தேவர், உரைக்கு வேண்டிய ஆராய்ச்சி செய்ய, திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களை ஈட்ட முயற்சித்த போது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் மனைகளிலிருந்தும் பெற முடியவில்லை. இந்நிகழ்வு தேவரின் உள்ளத்தை மிக கடுமையாகப் பாதித்தது. பண்டைக்காலம் முதல் தமிழ்ச் சங்கங்கள் கூடிய மதுரை மூதூருக்கும், அங்கு வளர்ந்த தமிழுக்கும் ஏற்ப்பட்ட துன்பியல் நிலையை எண்ணி இவர் உள்ளம் வேதனையுற்றது. இந் நிலையை மாற்றும் நோக்குடன் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்ட தேவர் அவர்கள், தனது திட்டத்தை 1901 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் அவையோர் முன் வேண்டுகோளாக முன்வைத்தார். அம்மாநாட்டில் நான்காம் தமிழ் சங்கம் மதுரையில் நிறுவுவது என்று திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாகவே நான்காம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டு செயல்பட தொடங்கியது. இத் தமிழ் சங்கதிற்கு தலைவராக தேவரே பொறுப்பேற்று சங்கத்தை கட்டியெழுப்பும் பொருட்டு அயராது செயல்பட்டார். மேலும் தமிழகம் மற்றும் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து தமிழ் வல்லுனர்களை அழைத்து, சங்கத்தில் அங்கத்தவராக்கி எதிர்கால தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் தேவராவார்.தமிழன்னைக்கு மேல் கூறிய தொண்டுகள் மட்டுமல்லாது, செய்யுள் இயற்றித் தொண்டாற்றும் புலமையும் ஆற்றலும் தேவரவர்களிடம் இருந்தது, இதற்கு சான்றாக சிவஞானபுர முருகன் காவடிச்சிந்து, சைவ மஞ்சரி, இராஜராஜேஸ்வரிப் பதிகம், பன்னூல் திரட்டு மற்றும் பல தனி நிலைச் செய்யுள்களும் பல சிறப்பாயிரங்களும் திகழ்கின்றன. தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும், வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த தேவரவர்கள், வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.

தமிழின் உயர்வுக்காக உறங்காது உழைத்த உத்தமர், 1911ஆம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம் நாள் வள்ளல் பாண்டித்துரைத் தேவர், உயிர் துறந்ததை எண்ணி தமிழ் உலகம் வருந்தியபோதும், அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ் சங்கம் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தொண்டாற்றி வருவது தேவரவர்களின் உண்மைத் தமிழ்ப் பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமிந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்கலாவிநோதர் என்றும், செந்தமிழ் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர்.

தமிழ் வளர்த்த வள்ளல், நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்த, சிறந்த தமிழறிஞரும் மன்னர் வம்ச வாரிசுமான பாண்டித்துரைத் தேவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

  1. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார் (1867). ராமநாதபுரம் மன்னர் வழித்தோன்றலான தந்தை இசைமேதை. பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சிறுவனை வளர்க்கும் பொறுப்பை அவரது ஏஜன்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார். புலவர் அழகர் ராஜா தமிழும் வக்கீல் வெங்கடேஸ்வர சாஸ்திரி ஆங்கிலமும் கற்றுத் தந்தனர்.
  2. சிவர்டிஸ் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். தமிழ்மொழியில் ஆழ்ந்த பற்றும் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டிருந்தார். திருக்குறளில் பல இடங்களில் எதுகை, மோனை சரியாக அமையவில்லை என்றும் அதையெல்லாம் திருத்தி எழுதி சரியான திருக்குறளை அச்சிட்டிருப்பதாக ஒரு ஆங்கிலேய பாதிரியார் இவரிடம் கூறினார்.
  3. திருக்குறளைப் புரிந்துகொள்ளாத அவரது அறிவீனத்தை உணர்ந்து, உடனே அவரிடமிருந்து அச்சிடப்பட்ட நூல்கள், கையெழுத்துப் பிரதி அனைத்தையும் விலைகொடுத்து வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டாராம்!
  4. தமிழுக்குப் புத்துயிரூட்டவும், தமிழை வளர்க்கவும் தமிழ்ச்சங்கம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். தமிழ்க் கல்லூரிகள் தொடங்குதல், சுவடிகள், நூல்களைத் தொகுத்து வெளியிடுதல், பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், தமிழாராய்ச்சிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், இவரது தலைமையில் மதுரையில் 1901-ல் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது.
  5. தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான தமிழறிஞர்கள் இதன் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இது ‘நான்காம் தமிழ்ச் சங்கம்’ என வரலாற்றில் முத்திரை பதித்தது. இவர் இதன் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். சங்கம் சார்பில் ‘செந்தமிழ்க் கலாசாலை’ என்ற தமிழ்க் கல்லூரி, பாண்டியன் நூலகம், தமிழ் ஆய்வு மையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.
  6. தந்தையின் மாளிகைக்கு அருகே இவர் கட்டிய ‘சோமசுந்தர விலாச மாளிகை’, தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் நிறைந்திருக்கும் கலை, இலக்கியக்கூடமாகத் திகழ்ந்தது.
  7. ஆறுமுக நாவலரின் உதவியோடு பல அரிய நூல்களை ஏட்டுச்சுவடிகளிலிருந்து அச்சில் பதிப்பித்தார். சிங்காரவேலு முதலியார் சேர்த்து வைத்திருந்த கலைக்களஞ்சிய அகராதிக்கான தகவல்களைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிட பொருளுதவி செய்தார்.
  8. தேவாரத் திருமுறைப் பதிப்புகள், சிவஞான ஸ்வாமி பிரபந்தத் திரட்டு, சிச்சமவாதவுரை மறுப்பு உள்ளிட்ட நூல்களை வெளியிடச் செய்தார். பன்னூற்றிரட்டு, சைவ மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார். இவர் இயற்றிய காவடிச் சிந்து மிகவும் புகழ் வாய்ந்தது.
  9. தமிழ்ச்சங்கம் சார்பில் வெளிவந்த செந்தமிழ் இதழில், உ.வே.சா., ராகவையங்கார், அரசன் சண்முகனார், ராமசாமிப் புலவர், சபாபதி நாவலர், சுப்பிரமணியக் கவிராயர் உள்ளிட்ட தமிழறிஞர்களின் படைப்புகள் வெளிவந்தன. வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் திட்டத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியை அள்ளிக்கொடுத்த தேசபக்தர்.
  10. மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர், தலைமைப் புலவர், செந்தமிழ் கலாவிநோதர், தமிழ் வளர்த்த வள்ளல், செந்தமிழ்ச் செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்ட தமிழ்க்காவலர். குறுகிய கால வாழ்நாளுக்குள் பைந்தமிழ் வளர்ச்சிக்கு அசாத்தியமான பங்களிப்பை வழங்கிய பாண்டித்துரை தேவர் 1911-ம் ஆண்டு 44-வது வயதில் மறைந்தார்.
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: