தீயில் தன்னுயிர் ஈந்த “மொழிப்போர் ஈகி” மாணவர் மயிலாடுதுறை சாரங்கபாணி!

தீயில் தன்னுயிர் ஈந்த “மொழிப்போர் ஈகி” மாணவர் மயிலாடுதுறை சாரங்கபாணி!

தீயில் தன்னுயிர் ஈந்த “மொழிப்போர் ஈகி” மாணவர் மயிலாடுதுறை சாரங்கபாணி!

மாயவரம் சாரங்கபாணி (1947-1965) என்று அறியப்படும் சாரங்கபாணி இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குளித்து இறந்த ஒரு போராளி ஆவார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் :

மதுரையில் இந்தி திணிப்பை கண்டித்து அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதையறிந்த மாணவர்கள் மாநிலந் தழுவிய அளவில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டங்களை நடத்தினர். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி என்று அழைக்கப்படும் அன்னதானபுரம் வகையறா கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த சாரங்கபாணியும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

தமிழன்னைக்கு எனது உயிரை துறக்கிறேன்… இப்படி இறுதியாகக் கூறி தனது இறுதி மூச்சையடக்கியவன் மாணவக் கண்மணி சாரங்கபாணி. அப்போது அவருக்கு வயது 20. மயிலாடுதுறையில் உள்ள முடிகொண்டான் ஆற்றங்கரையில் உள்ள மருதவஞ்சேரியில் 1947ஆம் ஆண்டு பிறந்தார்.

சனவரி 26ஆம் நாளன்று தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் அடங்காது ஆர்ப்பரித்தனர். 50 நாட்கள் தாண்டியும் தீயின் நாக்குகளுக்கு தன்னுயிரை தின்னக் கொடுத்த வண்ணம் இருந்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவக்கண்மணி இராசேந்திரன் துப்பாக்கிக் குண்டை தன்னுடலில் ஏந்தி மடிந்தான். அது முதல் மாணவர்களின் கோபம் அடங்க மறுத்தது. இந்தக் கோபம் மாணவக் கண்மணி சாரங்கபாணியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் இளங்கலை. முதலாமாண்டு படித்து வந்தான்.

மயிலாடுதுறையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்த சாரங்கபாணி, காங்கிரஸ் தலைவர்களின் ஆணவத்தையும், தமிழ்நாட்டின் தெருக்களில் இராணுவம் ஆயுதம் தாங்கி நடமாடுவதையும் கண்டித்து 15.03.1965 இல் கல்லூரி வளாகத்திலேயே தன் மீது மண்ணெண்ணை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். மற்றவர் நம்மை காப்பாற்றி விட்டால் என்ன செய்வது? என்று யோசித்தான். ஒரு மரத்தின் கீழ் நின்று உடல் நனையும்படி மண்ணெண்ணெயை ஊற்றினான். பிறகு தான் கொண்டு வந்திருந்த கயிற்றைக் தன்காலில் கட்டினான். கயிற்றின் மறுபகுதியை மரத்தில் கட்டினான். பிறகு தலை கீழாக தொங்கிக் கொண்டு இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று முழக்கமிட்டு தனது உடலுக்கு தீ வைத்தான். உடல் முழுக்க எரிந்தது. சிறிது நேரத்திலேயே மரணம் அவனை முத்தமிட்டு அணைத்துக் கொண்டது. உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் மருதுவாஞ்சசேரியில் அடக்கம் செய்யப்பட்டது.

சாரங்கபாணியின் தாயார் மண்ணில் உருண்டு என் மகனின் சாவிற்கு காரணமானவர்கள் நாசமாய் போகட்டும் என்று அழுது புலம்பினார். அதன் பிறகு நடந்த தேர்தலில் பேராயக்கட்சி தோற்று நாசமான கதை அறிவோம். 42 ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரி வளாகம் அருகில் சாரங்கபாணி நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: