‘களப்பிரர்’ ஆட்சி நாணயம்: சில உண்மைகள்!

'களப்பிரர்' ஆட்சி நாணயம்: சில உண்மைகள்!

‘களப்பிரர்’ ஆட்சி நாணயம்: சில உண்மைகள்!

சங்ககால இறுதியில், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை, ‘களப்பிரர்’ என்ற பெயர் கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை, தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்ததாக, வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர். ‘அவர்கள் ஆண்ட காலம், தமிழக வரலாற்றின் இருண்ட காலம்’ என்று எழுதி உள்ளனர். அந்த இனக் குழுவினர் எங்கிருந்து வந்தனர், அவர்களின் மதம், மொழி இவை எதையும், சரியாக அறிய முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர்களைப் பற்றிய கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களோ, நாணயவியல் ஆதாரங்களோ கிடைக்கவில்லை.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


8ம் நுாற்றாண்டை சேர்ந்த, ‘வேள்விக்குடி’ செப்பேட்டில், களப்பிரர்களைப் பற்றிய செய்தி உள்ளது. ஜடாவர்மன் பராந்தக பாண்டிய அரசனால் வெளியிடப்பட்டது. ‘களப்பிரர் நாணயங்கள்’ என, திரு.எல்.இராமையா, 1973 ம் ஆண்டு, ஒரு கட்டுரை வெளியிட்டார். 1986 ம் ஆண்டு, களப்பிரர் நாணயம் பற்றிய, படத்துடன் கூடிய கட்டுரை ஒன்றை நான் வெளியிட்டேன். வரலாற்று ஆசிரியர்கள், நாணயத்திலுள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லை என்று, ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அந்தக் கட்டுரை வெளியாகி, 30 ஆண்டுகளுக்குப் பின், இங்கு வெளியிடப்பட்டிருக்கும் நாணயம், எனக்கு சற்றும் எதிர்பார்க்காத சூழலில் கிடைத்தது. சென்ற மாதம், எனது பல்லவர் நாணயங்களின் தொகுப்பை சுத்தம் செய்யும் போது, இதுவரை நான் கண்டிராத ஒரு வித்தியாசமான நாணயம் இருப்பதைக் கண்டேன். அந்த நாணயத்தை வைத்திருந்த சிறிய காகிதக் கூட்டின் மேல், கரூர் அருகே உள்ள அமராவதி ஆற்றில், 1986 ம் ஆண்டு கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளேன். அந்த நாணயத்தைப் பற்றிய குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளேன். நாணயம் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது.

நாணயத்தின் முன்புறம் :

யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி நிற்கிறது. யானையின் முன்பு, மூன்று மரத்துாண்களைக் கொண்ட ஒரு இலச்சினை இருக்கிறது. கிளைகளுடைய ஒரு மரச்சின்னம் யானையின் பின்னே இருக்கிறது. யானையின் மேல் பகுதியில், இடமிருந்து வலப்பக்கமாக, நான்கு பிராமி எழுத்துக்களைப் பார்க்க முடிகிறது. அதை ஆங்கிலத்தில் GALAPARA என்று படித்துள்ளேன். தமிழ் எழுத்தில், ‘Ga’ என்ற எழுத்து வடிவம் இல்லாததால், ‘Gaலபர’ என்று எழுத வேண்டியுள்ளது. ‘Ga’ என்ற எழுத்து ஆரம்பத்திலும், அதை அடுத்து, ‘ல’ எழுத்தும், அதை தொடர்ந்து, ‘ப’ எழுத்தும், அதன் வலப்பக்கத்தில், ‘ர’ என்ற எழுத்து, தனியாக மேல் பகுதியிலும் உள்ளது. இந்த எழுத்துத் தொடரை அடுத்து, நான்கு சின்னங்கள் உள்ளன. முதல் சின்னம், ‘சுவஸ்திகை’, இரண்டாது, ‘திருவஸ்தா’ என்று அழைக்கப்படும் சின்னங்கள் இரண்டும், அடுத்தடுத்து உள்ளன. கடைசியாக உள்ள சின்னம், ஐந்து கால்களுடைய சக்கரம்.

நாணயத்தின் பின்புறம் :

நாணயத்தின் முழுமையான இடத்தை, ஐந்து கிளைகளுடைய மரச்சின்னம் அடைத்து கொண்டுள்ளது.

நாணயத்தின் காலம் :

அழகான அச்சு முறையில், நாணயம் தயார் செய்யப்பட்டுள்ளது; வார்ப்பு முறையில் அல்ல. இந்த நாணயத்தின் குறுக்களவு, எடை போன்றவைகளை வைத்து, ரோமானிய செம்பு நாணயங்களுடன் ஒத்திருக்கிறதா என்று ஆய்வு செய்தேன். எனக்கு வியப்பு அளிக்கும் தகவல் கிடைத்தது. லண்டன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள, முக்கியமான ரோமன் நாணயங்களைப் பற்றிய தொகுப்பு நுாலில், இதே குறுக்களவு, இதே எடை கொண்ட நாணயம் இருப்பதைக் கண்டேன். பேரரசர் விக்டோரியஸ் வெளியிட்ட, செம்பு நாணயத்தை ஒத்திருந்தது. ரோமானியர்களுடன், தமிழர்கள் பல நுாற்றாண்டு வாணிப தொடர்பு வைத்திருந்தனர். இந்த செம்பு ரோமன் நாணயத்தை, ‘அன்டோனியனஸ்’ என்று, அழைக்கின்றனர். கி.பி., 269ம் ஆண்டு வெளியிடப்பட்டது என்றும் அறிந்து கொண்டேன்.

ஆய்வின் முடிவு :

இந்த நாணயத்தின் முன்புறம் யானையையும், பின்புறம் கிளைகளுடைய மரச் சின்னத்தையும் காண்கிறோம். அதேபோல், சின்னங்களைக் கொண்ட நாணயங்களை தக்கணத்தில் கி.பி., ஒன்றாம் நுாற்றாண்டிலிருந்து, கி.பி., மூன்றாம் நுாற்றாண்டு வரை ஆட்சி செய்த பெரும் வல்லமை பொருந்திய சாதவாகனர்களும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்துள்ளனர். சாதவாகனப் பேரரசர் வீழ்ச்சியுற்ற பின், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய பழங்குடி அரசுகள் விடுதலை பெற்று, தனி அரசுகளாகச் செயல்பட்டன. தமிழ்நாட்டின் வட எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையில் இருந்த ஒரு மலை வாழ் மக்களின் தலைவன், தன் படையுடன் சங்ககால சேரர்களின் தலைநகரான கரூரை கைப்பற்றியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் சேரர்கள் மிகச் செல்வச் செழிப்புடன் இருந்திருக்க வேண்டும். சங்ககாலச் சேரர்கள், ரோமானியர்களுடன் சுமார் முன்னுாறு ஆண்டுகள் வாணிபம் செய்திருக்கின்றனர். ரோமானியர் பேரரசர்களின், தங்கம், வெள்ளி நாணய புதையல்கள், 19 ம் நுாற்றாண்டிலும், 20ம் நுாற்றாண்டிலும், கோவை மாவட்டத்தில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேரர்களின் செல்வத்தை, இந்தப் புதையல்களிலிருந்து மதிப்பிடலாம். கலபர (Galapara) நாணயத்தின் முன்புறத்திலுள்ள நான்கு இலச்சினைகள், சங்ககால நாணயங்களில் காணப்படும் இலச்சினைகளை ஒத்திருக்கின்றன. அக்காலத்தின் இறுதிக் கட்டத்தில், இந்த கலபர நாணயம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். கலபரர் ஆட்சி, நுாறு ஆண்டுகளுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. சாதவாகனர்களிடம் தளபதிகளாக இருந்த பல்லவர்கள், சாதவாகனர்கள் வீழ்ச்சியடைந்த பின், தங்கள் அரசை உருவாக்கிக் கொண்டு, தமிழகத்தின் வட பகுதிகளை கைப்பற்றினர். கலபரர் ஆட்சியை, கி.மு., நான்காம் நுாற்றாண்டின் நடுவில் வீழ்தியிருக்க வேண்டும். இந்த ஆய்வின் முடிவு, களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்தனர் என்று கூறுவது, தவறு என்று எண்ணத் தோன்றுகிறது.

  • இரா.கிருஷ்ணமூர்த்தி
Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: prasanth e

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: