விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இலங்கை இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இலங்கை இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை!

முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை விரும்பி, பகிர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

சர்ச்சைக்குரிய முகநூல் பதிவொன்றை மையப்படுத்தி இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.

2018-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்று முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தினேஸ் குமார் என்ற இளைஞரே அந்த சர்ச்சையான பதிவை முகநூலில் பதிவேற்றம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவை விரும்பி (லைக்), பகிர்வு செய்தார் என விதுசன் என்ற இளைஞனும் கைது செய்யப்பட்டிருந்தார்.

விதுசனுக்கு பிணை வழங்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்த மீளாய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகீ ராஜரத்ன புதன்கிழமை (17-10-2018) ஆராய்ந்தார். இறுதியாக விதுசனுக்கு பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி, முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஒரே நாளில் பிணை வழங்க முடியுமெனில், லைக் செய்த இந்த இளைஞனை 10 மாதம் தடுத்து வைத்திருந்தது எவ்வகையில் நியாயம் என நீதிபதி வினவியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வாழ்த்துச் செய்தியை பதிவிட்ட குற்றச்சாட்டில் கைதான தினேஸ் குமார் என்ற இளைஞருக்கு பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அவருக்கு பிணை பெறுவதில் சிக்கல் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படமும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இலச்சினையும் அந்தப் பதிவில் இருந்ததாக முறையிடப்பட்டுள்ளது. நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த ஒரு பதிவை தனது முகநூலில் விதுசன் என்ற இளைஞர் விரும்பி, பகிர்வு செய்துள்ளார் என குற்றசம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னதாக இரத்தினபுரி காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த விவகாரம் தேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது.

விதுசன் கைதுசெய்யப்படும்போது அவருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. எனவே அவர் சிறுவர் நன்னடத்தை மையத்தில் கடந்த ஜூலை மாதம் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 18 வயது பூர்த்தியான பின்னர் (09.07.2018) கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் புகைப்படத்துடன், அந்த அமைப்பின், இலட்சினையுடன் புதுவருட வாழ்த்து, முகநூலில் காட்சிப்படுத்தல், பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவ்விரு இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்த செயல் அமைந்ததா என்பது குறித்து தேடப்படுகிறது. 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ICCRC சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய குறித்த பதிவு விரும்பி (லைக்) செய்யப்பட்டிருந்தால் அது குற்றமாகாது எனவும், பகிர்வு செய்திருந்தால் அது குற்றத்தின் கீழ் வரும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றில் விதுசன் பிணை மனு மீதான விசாரணைகளின் போது சட்டமா அதிபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரச வழக்கறிஞர் ஒருவர் கூறியிருந்தார்.

சர்ச்சைக்குரிய பதிவு பகிர்வு செய்யப்பட்டுள்ளதா, பகிர்வு செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு தூரம் பேஸ்புக் மூலம் பரவியிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு முகநூல் நிறுவனத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: