மன்னார் மனிதப் புதை குழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம்!

மன்னார் மனிதப் புதை குழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம்!

மன்னார் மனிதப் புதை குழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம்!

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக மன்னார் சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட தரப்பினருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக வெளியான அறிக்கையின்படி, இந்தப் புதைகுழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானவை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனித எச்சங்கள் கிறித்துவுக்கு பின் 1477 – 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு வெளியான அறிக்கை குறித்து ஆராய்ந்த மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி, அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டார். இதன்படி, இந்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகளை தொடர்வது குறித்து நீதிபதி தலைமையில் சிறப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள், பல்வேறு ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமிந்த ராஜபக்ஸ, அந்த அறிக்கைகள் கிடைக்கும் வரை தீர்மானம் எதையும் எடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினாலும் குறித்த பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்ததாகவும், அந்த ஆய்வுகளின் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட மூன்று மாத கால அவகாசம் தேவையென இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி, மன்னார் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

அத்துடன், மன்னார் மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டு, தோண்டி எடுக்கப்படாமல் இன்னும் இருக்கும் மனித எச்சங்கள், மூன்று மாத காலம் அவ்வாறே வைக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை விரைவாக தோண்டி எடுக்காமல் இருந்தால், அவை சேதமாகும் என்பதால், அவற்றை மீண்டும் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமிந்த ராஜபக்ஸ கூறினார்.

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 343 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 330 தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகளில் 30, சிறார்களுடையவை என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: