இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவமானது, தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அத்தியாவசியம் என்பதனை எடுத்துக்காட்டுவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பிரதேசத்தினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு முகாம்கள் காணப்பட வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் வசம் காணப்படுகின்ற நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த அரச மற்றும் தனியார் நிலங்களை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தமது அரசாங்கம் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முப்படையினருடன் இணைந்து வடக்கிலுள்ள காணிகளை பார்வையிட்டு, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது என கருதப்படும் காணிகளை அடையாளம் கண்டு, அது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் தேதிக்கு முன்னர் வடக்கு ஆளுநரிடம் கையளிக்குமாறும் உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கில் தனியார் காணிகளில் நடத்தி செல்லப்படும் இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் தேவைப்படுமாயின், அதற்கான நட்டஈட்டை உரிய தரப்பிற்கு குறிப்பிட்ட காலத்திற்குல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>