இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல் வீசித் தாக்குதல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகுகளை வழிமறித்து மீனவர்கள் மீது கற்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். கல்வீசி தாக்கியதால் படகின் வீல்ஹவுஸ் கண்ணாடிகள் நொறுங்கின. அச்சமடைந்த மீனவர்கள் வேறு பகுதிக்கு சென்று மீன் பிடித்தனர்.

தொடர்ந்து விரட்டி வந்த இலங்கை கடற்படையினர் 10க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். வேறுவழியின்றி அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு சென்று மீன் பிடித்து விட்டு நேற்று ராமேஸ்வரத்துக்கு குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்பினர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே டீசல் விலையேற்றம், சூறாவளிக் காற்று என பல நாட்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வந்த ராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த சில நாட்களாகத்தான் மீன்பிடிக்க செல்கின்றனர். தற்போது இலங்கை கடற்படையின் விரட்டியடிப்பு நடவடிக்கையால் மீன்பிடி தொழில் முடங்கும் சூழ்நிலை உள்ளது. ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

நன்றி :தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: