மனநல பட்டய பயிற்சி திட்டம் துவக்கினார் சைலேந்திரபாபு

 
 மனநல பட்டய பயிற்சி திட்டம் ,துவக்கினார் சைலேந்திரபாபு
facebook sharing button
காவல் துறையில் பணிபுரியும் 1.30 லட்சம் பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் பேருக்கு, மனநல பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி, 27. இவர், சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். செப்., 4ல், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்தவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இவர், ‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் 7 லட்சம் ரூபாயை இழந்ததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதேபோல, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர், பிளேடால் கையை கிழித்து உள்ளார்.

ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் இளம் போலீசார், குடும்ப பிரச்னை, காதல் தோல்வி, அதிகாரிகளின், ‘டார்ச்சர்’ உள்ளிட்ட காரணங்களால், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தீர்வு காண வேண்டும் என்று சமீபத்தில் நம் நாளிதழிலில், ‘டீ கடை பெஞ்சு’ பகுதியில் தகவல் வெளியாகி இருந்தது.

இதன் எதிரொலியாக, 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று லட்சம் பேருக்கு, நிறைவு வாழ்வுக்கான மனநல பயிற்சி அளிக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்படும், தேசிய மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், 112 போலீசார் மற்றும் 134 மனநல ஆலோசகர்களுக்கு, மூன்று மாதங்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக, பட்டய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பின், அவர்கள் வாயிலாக, 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் பேருக்கு மனநல பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி, காவலர் நலன் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் யாதவ் மேற்பார்வையில் நடக்க உள்ளது. மனநல பட்டய பயிற்சி அளிக்கும் திட்டத்தை, ஆன்லைன் வாயிலாக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று துவக்கினார். பயிற்சி குறித்து, தேசிய மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பிரதிமா மூர்த்தி பேசினார்.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: