முல்லை பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகளுக்கு தெரியாமல் கேரளா ஆய்வு

முல்லை பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 136.80 அடியை கடந்த நிலையில், இடுக்கி மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கே. ஷாஜி மற்றும் மூணாறு லேண்ட் அசைன்மென்ட் டெபுடி தாசில்தார் கீதா குமாரி தலைமையிலான குழுவினர் முல்லை பெரியாறு அணையில் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முன்னதாக ஆய்வுக்காக இவர்கள் தேக்கடி படகு துறையிலிருந்து கேரள வனத்துறையின் ஸ்பீடு போட்டில் அணைக்கு புறப்பட்டு சென்றனர். இக்குழுவினர் ஆய்வுக்கு செல்வது குறித்து தமிழக அதிகாரிகளிடம் அனுமதி பெறவோ, தெரிவிக்கவோ இல்லை. அணை பகுதியை ஆய்வு செய்துவிட்டு திரும்பினர்.

முன்னதாக பெரியாறு அணையின் தாழ்வான கரையோர பகுதியான வண்டிப்பெரியாறு, மஞ்சுமலை, உப்பு தரை பகுதியிலுள்ள மக்களை சந்தித்து பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் வெளியேற்றப்படுமானால்  பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை இடுக்கி மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். பெரியாறு அணையில் பணியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கேரள அதிகாரிகள் அணையில் ஆய்வு செய்து திரும்பியது தமிழக விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: