மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்!

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்!

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்!

தமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16, 2047/ 1.12.2016) இயற்கையோடு கலந்தார்.

உடல் நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நோயிலிருந்து மீளாமல் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.

இன்குலாப்பின் இயற்பெயர் எசு. கே. எசு. சாகுல் அமீது. கீழக்கரை என்னும் ஊரில் இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார்.

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆகவே, பேராசிரியர் சி.இலக்குவனாரின் மாணவராகும்பேறு பெற்றார். இதனால், தமிழுணர்வும் போர்க்குணமும் பெற்றார்.

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் முன்னெடுப்பில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளிமுத்து முதலானவர்களுடன் இணைந்து தானும் பங்கேற்றார்; சிறை வாழ்க்கையும் பெற்றார்.

படிப்பை முடித்துச் சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் (பயிற்றுநராகப்) பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா.பாண்டுரங்கன் போன்றோர் உடன் பணி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளாராக இருந்தார். பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளர் ஆனார். பிறகு மார்க்சிய இலெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா.லெ.அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வே.பிரபாகரனைச் சந்தித்த நிகழ்வு இன்குலாப்பின் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்று.

இளவேனில் என்பவர் நடத்திய ‘கார்க்கி’ இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். ‘சூரியனைச் சுமப்பவர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ‘மார்க்சு முதல் மாசேதுங்கு வரை’ என்னும் மொழியாக்க நூலை எசு.

வி.இராசதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள். “மனுசங்கடா, நாங்க மனுசங்கடா” என்னும் இவர் பாட்டு எண்ணற்ற மேடைகளில் ஒடுக்கப்பட்டவர்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் ஔவை, மணிமேகலை ஆகிய நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாபு எழுதிய கவிதைகள் அனைத்தும் ‘ஒவ்வொரு புல்லையும்’ என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.

சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது என்று சில விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன..

இவர் மறைவு குறித்து உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள், பின்வருமாறு இரங்கலுரை தெரிவித்துள்ளார்:

‘இன்குலாபு’ என்றால் புரட்சி என்று பொருள். தன் புரட்சி எண்ணத்தை எதிரொலிக்கும் வகையில் இப்பெயரைச் சூட்டிக்கொண்டார்.

பிற மொழிப்பெயரைச் சூட்டிக் கொண்டாலும் தமிழ்மொழிப்பற்று மிக்கவர். “புரட்சிக்குணமும் போராளிச் செயல்பாடும் மிக்க ஒரே பேராசிரியர்” எனத் தம் ஆசிரியர் பேராசிரியர் இலக்குவனார் பற்றி அடிக்கடிக் குறிப்பிடுவார். அவரைப்போலவே கவிஞர் இன்குலாபும் போர்க்குணம் கொண்ட பேராசிரியராகத் திகழ்ந்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.

கவிஞர்கள், புரட்சி எண்ணம் கொண்டவர்கள், பொதுவுடைமையாளர்கள், இயக்கத்தினர், நண்பர்கள், குடும்பத்தினர் என அவர் பிரிவால் வாடும் அனைவருடனும் இணைந்து நானும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: