காரைக்குடி அழகப்பா பல்கலை இந்திய அளவில் 33வது இடம்: பதிவாளர் தகவல்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழக வரிசையில் 33வது இடத்தை பெற்றுள்ளது என பதிவாளர் சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வெளிப்பாடு, சர்வதேச வெளிப்பாடு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் வெளிப்பாடு, சர்வதேச வெளிப்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், கருத்துக்கணிப்புகள் என ஐந்து பகுதிகளின் கீழ் மதிப்பீடு செய்தும் ஆராய்ச்சி வெளியீடுகள் அதிகமான மேற்கொள்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தரவரிசை படுத்தப்படும்.

தேசிய கல்வி நிறுவன தரவரிசை 2021னில் (என்ஐஆர்எப் 2021) கலந்து கொள்ள பல்கலைக்கழக தரவரிசைப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ஜெயகாந்தன் 2021ம் ஆண்டுக்காக தகவல்களை பல்கலைக்கழக பல்வேறு துறைகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகளிடம் இருந்து சேகரித்து அதனை முறைப்படுத்தி சமர்ப்பித்தார். இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு 2021ம் ஆண்டிற்கு நடத்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழக வரிசையல் 33வது இடத்தை பெற்றுள்ளது. தவிர 1657 உயர்கல்வி நிறுவனங்கள் வரிசையில் 57வது இடத்தையும், தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழக தரவரிசையில் 4வது இடத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய பல்கலைக்கழக வரிசையில் 36வது இடத்திலிருந்து 33வது இடத்தை தற்போது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். அகில இந்திய அளவில் 33வது இடத்தை பெற உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவர்களை தமிழக உயர்கல்வி செயலாளரும், துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவருமான கார்த்திகேயன், துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் டாக்டர் சுவாமிநாதன், மூத்த பேராசிரியர் குருமூர்த்தி மற்றும் பதிவாளர் சேகர் ஆகியோர் பாராட்டினர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: