ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி,பெயர் பலகையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சுதந்திர போராட்ட தியாகி கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி  ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் “தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்”
எனப் பெயர் சூட்டி, பெயர் பலகையினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் 1904-ம் ஆண்டு நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு மகனாக பிறந்த திருப்பூர் குமரன் என்று அழைக்கப்படும் குமாரசாமி, திருப்பூரில் 1932-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தேசத்திற்காக தன் உயிரை துறந்தார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத்நகர் பிரதான சாலைக்கு “தியாகி குமரன் சாலை சம்பத் நகர்’ எனப் பெயர் மாற்றம் செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் வழியாக அரசின் அனுமதி பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு “தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்’ எனப்  பெயர் சூட்டி 3.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அந்தியூர் ப. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. திருமகன் ஈ.வெ.ரா, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிருஷ்ணனுன்னி, இ.ஆ.ப., ஈரோடு மாநகராட்சி ஆணையர் மருத்துவர் இளங்கோவன், திருப்பூர் குமரன் அவர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர், தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பி. பொன்னையா, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: