சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து

ramdas-athawale
 

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் நேற்றுஅமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை நல்ல முடிவாகத்தான் நான் பார்க்கிறேன். தமிழகத்தில் அடுத்தமுறை அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்.

தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்கள், வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். அப்போதுதான் வறுமையை ஒழிக்க முடியும். இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழகத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதி விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அப்போதுதான் மொத்த தொகையில் எவ்வளவு இருக்கிறாம் என்பது மக்களுக்குத் தெரியவரும். சாதிய பாகுபாட்டை அதிகரிப்பது இதன் நோக்கம் கிடையாது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். தமிழக சமூக நலத் துறை இயக்குநர் ரத்னா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: இந்து தமிழ்

 

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: