7.5% இடஒதுக்கீட்டில் இன்ஜி., படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

 
இன்ஜினியரிங், கல்வி, விடுதி, கலந்தாய்வு கட்டணம், அரசே ஏற்கும், முதல்வர் ஸ்டாலின்
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
‛‛7.5 சதவீத இடஒதுக்கீட்டில் படித்து இன்ஜினியரிங் படிக்கும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் கலந்தாய்வுக் கட்டணத்தை அரசே ஏற்கும்,” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அரசு பள்ளியில் படித்து இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டசபையில் சட்டம் இயற்றியிருக்கிறது. இதன் மூலம் 11 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெற உள்ளனர். மாணவர்களின் இன்ஜினியரிங் படிப்பு கனவை நனவாக்கியுள்ளோம். இன்ஜினியரிங் படிப்பு கிடைக்குமா என்ற மாணவர்களின் ஏக்கம் நிறைவேறும் நாள் இது.

படிப்பு, படிப்பு, படிப்பு என்பதை மட்டுமே மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். கல்வி செல்வம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தாரக மந்திரமாக எடுத்துரைத்தார். காமராஜர் ஆட்சிக்காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலம் உயர்கல்வியின் பொற்காலம்.

தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். வென்று காட்டுவோம். மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்க தடையாக இருந்தவற்றை அகற்றியவர் கருணாநிதி.

தற்போது வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவ மாணவியர் 11 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளனர். அவர்களுக்கு இந்த அரசு சிறப்பான ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது. இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் கலந்தாய்வுக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். இதன் மூலம் அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் 3 கல்லுாரிகள் உட்பட தரம் வாய்ந்த கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு இந்த அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: