ராஜேந்திர சோழனின் வெற்றியை நிரூபிக்கும் கல்வெட்டு அழிப்பு : வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி

ராஜேந்திர சோழனின் வெற்றியை நிரூபிக்கும் கல்வெட்டு அழிப்பு : வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சிமுதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட, ஒரே தமிழ் மன்னன், ராஜேந்திர சோழன். கி.பி., 1019ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கை நீரை சுமந்து வந்து, கங்கை கொண்ட சோழபுரத்தின், பிரகதீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்தான். அதற்கு முன், கங்கை நீரை, திருலோக்கி கைலாசநாதர் கோவிலில் வைத்து வணங்கியதற்கான கல்வெட்டு சான்றுகள், அக்கோவிலில் உள்ளன. அந்த கல்வெட்டை, 2015ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, அறநிலைய துறையினர், வண்ணம் பூசி சிதைத்து விட்டனர். இது, வரலாற்று ஆர்வலர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


இதுகுறித்து, அங்கு கள ஆய்வு செய்த, வரலாற்று ஆய்வாளர் கூறியதாவது: சோழ தேசத்தை, கி.பி., 1012 முதல், 1044 வரை ஆண்ட, முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை நீரை கொண்டு வந்து, இக்கோவில் இறைவனை வணங்கிய பின், கங்கைகொண்ட சோழபுரம் சென்றான். இது, அவனின் மெய்கீர்த்தி கல்வெட்டில், தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு முக்கிய வரலாற்று சான்று; அது சிதைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நுளம்ப நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட, ரிஷபானந்தர் மற்றும் ரதிமன்மதன் சிலைகளை, வெற்றி சின்னங்களாக இக்கோவிலுக்கு வழங்கியதாக கல்வெட்டு கூறுகிறது. அவையும், தற்போது வண்ணம் அடித்து, சிதைக்கப்பட்டு விட்டன.

ராஜேந்திர சோழனின் வெற்றியை நிரூபிக்கும் கல்வெட்டு அழிப்பு : வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி

ராஜேந்திர சோழனின் வெற்றியை நிரூபிக்கும் கல்வெட்டு அழிப்பு : வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி

இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: பழமையான கல்வெட்டுகள், புராதன சின்னங்களை மாற்றவோ, சேதப்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. அவை, கடந்த கால ஆவணங்கள். அவற்றை அழகுபடுத்துவதாக எண்ணி, வண்ணம் பூசுவதால், அவற்றின் மதிப்பு குறைவதோடு, எழுத்துக்களை படிக்க முடியாமலும் போய்விடும். திருலோக்கி கைலாசநாதர் கோவில், அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும், திருப்பனந்தாள் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்மடம், இவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை. இவ்வாறு நடைபெறாமல் இருக்கவே, தமிழக தொல்லியல் துறை, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து, பயிற்சி அளிக்கிறது. ஆனாலும், வரலாறுகள் அழிக்கப்படுவது வேதனை.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: