தமிழ், செம்மொழியாக இந்திய அரசு அறிவித்த நாள் இன்று !!!

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: 17-9-2004
 
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004ஆம் ஆண்டு இதே தேதியில் இந்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் தமிழ் மொழிக்கு உலக அரங்கிலும் தேசிய அளவிலும் மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

செம்மொழி தகுதியை அடைந்ததன் தொடர்ச்சியாக ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஐந்து நாள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் மற்றும் ஆய்வு மன்றங்கள் போன்ற நிகழ்ச்சிகளுடன் கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் மற்றும் தமிழ்க் கலாச்சாரக் கொண்டாட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
 
மாநாட்டினை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் தொடங்கி வைத்தார். மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்ற இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற பல உலக நாடுகளில் இருந்து தமிழ் இலக்கிய மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் வல்லுநர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். உலகில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் மிகவும் பழமையான இலக்கியங்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ் மொழி என்று குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: