தமிழிலேயே படித்து, தமிழிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி சாதித்த மணிகண்டன்!

தமிழிலேயே படித்து, தமிழிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி சாதித்த மணிகண்டன்!

தமிழிலேயே படித்து, தமிழிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி சாதித்த மணிகண்டன்!

அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்று, நேர்முக தேர்வை எதிர்கொண்ட 2,961 பேரில் 1,099 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் முசோரியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தானும் ஐ.ஏ.எஸ். ஆக மாட்டோமா? என்று ஏங்கி தவித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த தமிழ் மாணவர் மணிகண்டனும் ஐ.ஏ.எஸ். ஆக பயிற்சி பெறப்போகிறார். தமிழிலேயே படித்து, தமிழிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி சாதித்து இருக்கிறார், மணிகண்டன்.

மணிகண்டன் கடலூர் மாவட்டம், நெய்வேலி, வடக்கு மேலூரை சேர்ந்தவர். கூரை வேய்ந்த குடிசை வீட்டில் இருந்து ஒரு மாவட்டத்தை ஆள அந்த இளைஞர் புறப்பட இருக்கிறார். ஐ.ஏ.எஸ். தேர்வை எதிர் கொண்டது எப்படி? உங்களால் எவ்வாறு வெற்றி பெற முடிந்தது? என்பது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது தான் எனது கனவு. அந்த கனவு நிறைவேறுவதற்கு நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன். என்னுடைய பெற்றோர் படிக்காதவர்கள் என்பதால் அவர்கள் கூலி தொழிலாளிகளாக தான் வாழ்க்கையை தொடங்கினார்கள். அப்பா, ஆறுமுகம் நெய்வேலி சுரங்க நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக இருந்தார். உடல்நலக் குறைவால் அந்த பணியில் அவரால் நீடிக்க முடியவில்லை. அம்மா வள்ளி தான் வீட்டு வேலைக்கு சென்றும், வயலில் கூலி வேலை பார்த்தும் என்னை படிக்க வைத்தார். தங்கை சத்யா 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.

பள்ளி விடுமுறை நாட்களில் அம்மாவுடன் சேர்ந்து நானும் கூலி வேலைக்கு செல்வேன். அதில் கிடைத்த வருமானத்தை குடும்ப செலவுக்கும், என் படிப்பு செலவுக்கும் பயன்படுத்திக் கொண்டேன். கோவையில் பி.பார்ம் படித்தேன். பின்னர் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் எம்.பார்ம் படித்து முடித்தேன்.

குடும்பத்தின் வறுமையிலும், படிப்பை இடையில் நிறுத்திவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் என் படிப்பில் தான் என் குடும்பத்தின் எதிர்காலமும், என்னுடைய கனவும் இருக்கிறது என்பதை நான் நன்றாகவே உணர்ந்து இருந்தேன். 2012-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி மருந்து ஆய்வாளர் பதவிக்கு தேர்வானேன். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதற்காகவே சென்னை புரசைவாக்கத்தில் பணியிடத்தை தேர்வு செய்தேன். 2014-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மேலாளராக நியமிக்கப்பட்டேன். பின்னர் 2015-ம் ஆண்டு இந்தியன் ரெயில்வே கணக்கு பணியில் சேர்ந்தேன்.

2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக முதல்நிலை தேர்வு எழுதினேன். என்னால் வெற்றிபெற முடியவில்லை. 2012, 2013-ம் ஆண்டுகளிலும் எனக்கு தோல்வி தான் மிஞ்சியது. தமிழிலேயே தேர்வு எழுதி, தமிழிலேயே நேர்முக தேர்வை எதிர்கொண்டு ஐ.ஏ.எஸ். ஆகியே தீர வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னுடைய தமிழ் ஆசிரியர் முத்துசாமி கொடுத்த ஊக்கத்தால் தமிழிலேயே தொடர்ந்து படித்தேன்.

எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் நானாகவே படித்தேன். 2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வை தமிழிலேயே எதிர் கொண்டு வெற்றி பெற்றேன். அதனைத் தொடர்ந்து மெயின் தேர்வையும், நேர்முக தேர்வையும் தமிழிலேயே சந்தித்தேன். 332-வது ரேங்கில் நான் வெற்றி பெற்று இருக்கிறேன்.

332-வது ரேங்க் வரிசையில் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவன் நான் தான் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திலேயே எனக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் எனது பயணத்தை தொடங்க இருக்கிறேன்.

வருமானவரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எனக்கு 2012-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அவர் கொடுத்த ஊக்கம், நுணுக்கமான அறிவுரைகள் தேர்வில் வெற்றி பெற எனக்கு பெரிய உதவியாக இருந்தது. ஓய்வு பெற்ற வருமானவரித் துறை அதிகாரி சாரங்கி, புதுச்சேரி வருமானவரித் துறை இயக்குனர் விவேகானந்தன் ஆகியோரும் எனக்கு உதவியாக இருந்தனர்.

நல்லவர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும் போது தான் நாம் உச்சத்தை தொட முடியும். அந்த வகையில் எனக்கு சரியான நேரத்தில் இவர்கள் உதவி செய்தனர். வறுமையை கண்டு அஞ்சாமல், தமிழ் மொழியிலேயே தேர்வை அணுகி, நம்மால் வெற்றி பெற முடியும் என்று என்னை போன்றவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இதற்கு முதலில் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

பயிற்சிக்கு செல்ல இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு குறித்த பயிற்சியை அளிக்க இருக்கிறேன். தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், ஐ.ஏ.எஸ். பதவிகள் தமிழக மாணவர்களுக்கு எட்டாக்கனி அல்ல என்பதையும் அவர்களுக்கு விளக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

குடிசை வீட்டில் வறுமையின் பிடியில் வாழ்க்கையை தொடங்கிய மணிகண்டன் ஒரு மாவட்டத்தை ஆளப்போகிறார். இந்திய மாநிலங்களில் ஒன்றில் தனது முத்திரையை பதிக்கப் போகிறார் என்பது தமிழனாய் நமக்கும் பெருமை தான். தமிழிலேயே படித்து, தமிழிலேயே தேர்வை எதிர்கொண்டு ஐ.ஏ.எஸ். ஆக முடியும் என்பதை மணிகண்டன் இன்று நிரூபித்து, மற்றவர்களுக்கும் உந்துசக்தியாக இருக்கிறார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: