இன்று சர்வதேச ஜனநாயக தினம் மனிதராய் நின்று மனிதம் தழைக்க உறுதியேற்போம்!

ஜனநாயகத்தை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும், உலக நாடுகளை ஒன்று படுத்தவும் கடந்த 2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, ‘‘சர்வதேச ஜனநாயக தினம்’’ என்ற நாளை பிரகடனப்படுத்தியது. இதன்படி ஆண்டு தோறும் செப்டம்பர் 15ம்தேதி, சர்வதேச ஜனநாயக தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (15ம்தேதி) உலகநாடுகள் பெரும்பாலானவற்றில் சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் ஜனநாயக நிலையை ஆய்வு செய்வதே இந்த நாளின் நோக்கமாகும். ஜனநாயகம் என்பது ஒரு குறிக்கோளாக மட்டுமில்லாமல் செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதே இந்த நாளின் பிரதான கருப்பொருள். சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் மட்டுமே ஜனநாயகத்தின் லட்சியத்தை யதார்த்தமாக்க முடியும் என்பது சமூக மேம்பாட்டு ஆர்வலர்களின் கருத்து.எந்தஒரு  தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் என்று பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் காணப்படும் அரசியல் முறை கோட்பாடுகளுடன் ஜனநாயக கோட்பாடும் ஒன்றாகும். பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களாட்சியை குறிக்கிறது.

மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம் என்று கிரேக்க அறிஞர் பிளாட்டோ கூறியுள்ளார். ஏழ்மை நிலையில் உள்ளோர், தங்களுக்காக நடத்தும் ஆட்சியே மக்களாட்சி என்பது அரிஸ்டாட்டில் கருத்து. மக்களால் மக்களுக்காக புரியப்படும் ஆட்சி முறையே மக்களாட்சி. அதாவது மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே, மக்களாட்சி அரசாகும் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம்லிங்கன் தெளிவுபடுத்தினார். சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரத்தை பெற்றுள்ள ஆட்சிமுறையே ஜனநாயகம் ஆகும் என்பது அறிஞர் ராபர்ட்டால் கூற்று.

இந்த கூற்றுகளின் மொத்த வடிவமாக இந்தியாவும், அதில் நமது தமிழகமும் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. பல்வேறு இனம், மொழி, மதங்கள், கலாசாரங்கள் இங்கு நிரம்பி வழியும் நேரத்தில் ஜனநாயகமும் தளைத்தோங்கி நிற்பது பெருமைக்குரியது. அதே நேரத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்கள், ஜனநாயகத்தின் மீதான கேள்விகளை எழுப்புவதையும் மறுப்பதற்கில்லை. மாச்சர்யங்களை மறந்து மனிதர்களாய் நின்று, மனங்களால் ஒருங்கிணைந்து செயல்படுவது மட்டுமே இது போன்ற கரும்புள்ளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எனவே இந்த நாளில் மனிதராய் நின்று மனிதம் தழைக்க உறுதியேற்போம். மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம் என்று கிரேக்க அறிஞர் பிளாட்டோ கூறியுள்ளார். ஏழ்மை நிலையில் உள்ளோர், தங்களுக்காக நடத்தும் ஆட்சியே மக்களாட்சி என்பது அரிஸ்டாட்டில் கருத்து.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: