கீழடியில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் கண்டுபிடிப்பு!

கீழடியில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நடந்துவரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்துக்குள் நிறைவடையும் என தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கீழடியில் நடைபெற்று வரும் 5-ம் கட்ட அகழாய்வு பணிகளை நேற்று ஆய்வு செய்த அவரிடம் இதுவரை கண்டறிந்த தொல்பொருட்களை அதிகாரிகள் காட்டி விளக்கம் அளித்தனர். மிக நுட்பமாக அரிய பொருட்களை கண்டறிந்த தொல்லியல் துறை அதிகாரிகளையும், ஆய்வாளர்களையும் பாராட்டிய அவர், கூறியதாவது :

கீழடி அகழாய்வில் ஏராளமான அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அதேபோல் சுவர்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வு மூலம் சங்க காலத் தொன்மையை பற்றி அரிய செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன. 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்.

ஏற்கெனவே நடந்த அகழாய்வில் கண்டறிந்த தொல்பொருட்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டு வருகின்றன. முழு ஆய்வறிக்கை வந்ததும் முடிவுகள் வெளியிடப்படும். அனைத்து பொருட்களும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறையில் ஆய்வு செய்யப்பட்ட பிறகே முடிவுகள் வெளியிடப்படும்.

இதேபகுதியில் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அடுத்த கட்ட அகழாய்வு அப்பகுதிகளில் தொடங்கப்படும். எனத் தெரிவித்தார்.

கீழடியில் தொடர்ந்து மணிகள் அதிக அளவில் கிடைத்து வருவதால், சங்க காலத்தில் மணிகள் தயாரிக்கும் தொழில் சிறப்புற்று விளங்கியது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே வட அமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா கண்ட மலைகளில் காணப்படும் அகேட் கல்லில் செய்யப்பட்ட அணிகலன்கள் கிடைத்தன.

தற்போது சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் ஆகியவை கிடைத்துள்ளன. சூது பவளம் என்ற அரிய வகை கல் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் காணப்படுகின்றன. சூது பவளம் சங்க காலத்தில் மதிப்புமிக்க பொருளாக கருதப்பட்டுள்ளது. இந்த வகை கற்களால் செய்யப்பட்ட அணிகலன்களை மன்னர்கள், முக்கிய பிரமுகர்கள், செல்வந்தர்களே அணிந்து உள்ளனர்.

முன்னதாக செப்புக் காசு கிடைத்துள்ள நிலையில், தற்போது வெள்ளிக் காசும் கிடைத்துள்ளது. இதன்மூலம் 2 உலோகக் காசுகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல் செப்பு பொருளும் கிடைத்துள்ளதால், மண் பாண்டங்களோடு செப்பு பொருட் களையும் பழந்தமிழர்கள் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: