சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் 12ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் 12ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் 12ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்வராயன்மலை அருகே அருநூத்து மலைப்பகுதியில் உள்ள சிறுமலை என்ற கிராமத்தில் கி.பி.1202ம் ஆண்டு சோழர் கால நடுகல் (வீரக்கல்) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த பெருமாள் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், கல்வெட்டு ஆய்வாளர்களான விழுப்புரம் வீரராகவன், ஜீவநாராயணன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன், சுகவன முருகன், சீனிவாசன், டாக்டர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், பெரியார் மன்னன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறுமலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுமலை மாரியம்மன் கோவில் அருகே வயலில் இருந்த கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில், கி.பி.1202ம் ஆண்டு சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனின் 24ம் ஆட்சி ஆண்டை சேர்ந்த கல்வெட்டு என தெரியவந்தது. இதில், 14 வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. சிறுமலை என்னும் பெயரிலேயே 814 ஆண்டுக்கு முன்பு, இந்த கல்வெட்டில் ஊர் பெயர் அதே பெயரில் அழைக்கப்படும் சிறப்பை பெற்றுள்ளது.

12ம் நூற்றாண்டில் சோழர்களின் கீழ், ஒரு குறுநில நாடான ஆறகளூரை தலைநகராக கொண்டு மகதை நாடு இருந்தது. இந்த மகதை நாட்டின் எல்லைக்குள் சிறுமலை கிராமமும் இருந்துள்ளது. மகதை நாடாழ்வான் என்பவர் மன்னராக இருந்துள்ளார். இவரின் பிரதிநிதியாக சேலஞ்சுற்றி என்பவர், சேலம் பகுதிக்கு பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில் சேந்தனானகேசஞ் என்பவன் படையெடுத்து வந்தபோது, மகதை நாட்டு சிறுமலைப்பகுதியில் தோட்டப்பட்டப்பை பகுதியை சேர்ந்த அரணமுடையான் புயிலன் சேந்தனான கேசஞ், அதை தடுத்து நிறுத்தினான். அப்போரில் அரணமுடையான் புயிலன் இறந்து விட்டார். நாட்டுக்காக உயிரை கொடுத்த அந்த வீரனுக்காக, ஒரு நடுகல் வைக்கப்பட்டு அதில் இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் மேற்புறம் சற்று சிதைந்துள்ளது. இதில் வீரன் உருவம் ஏதுவுமில்லை. அவன் போரிட்ட எதிரி யார் என்பதும் இல்லை.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


சிறுமலையில் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதின் மூலம், 12ம் நூற்றாண்டில் மகதை நாட்டின் எல்லை கல்வராயன் மலை வரை பரவி இருந்ததை அறிய முடிகிறது. இதேபோல், சிறுமலையில் உள்ள சிவன் கோவிலில் சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை கோவில் திருப்பணியின் போது, அடியில் வைத்து கட்டப்பட்டதால் மேற்புறத்தில் சில வரிகள் மட்டுமே தெரிகிறது. அதேபோல் இங்குள்ள பிள்ளையார் கோவிலில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட 10க்கும் மேற்பட்ட கற்கால கருவிகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் 6 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே, புதிய கற்காலத்தில் இது மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்த பகுதியில் இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என வரலாற்று தேடல் குழுவினர் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: