செயங்கொண்டான் களங்கண்ட கவிஞன்!

செயங்கொண்டான் களங்கண்ட கவிஞன்!

செயங்கொண்டான் களங்கண்ட கவிஞன்!

களம் பாடியவன்; வீரவளம் பாடியவன்; சோழர் குலம் பாடியவன்; காளி தலம் பாடியவன்; பெண்ணின் நலம் பாடியவன்; பகைவர் புலம் பாடியவன்; குருதிக் குளம் பாடியவன்; பாலை நிலம் பாடியவன்; சொல்லில் சிலம்பாடியவன் என்ற அத்துணை மிகுமொழிகளுக்கும் தகுமொழியாளரே கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டார்.

வரையறுக்கப்பட்ட 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் பரணியும் ஒன்று. ஆனால், தமக்கு நிகராய் ஒரு புலவரை வைக்கக் கருதாத சொக்கநாதப் புலவர் போன்றவர்களால் ‘பரணிக்கோர் செயங்கொண்டார்’ என்று பாடப்பட்ட தக்க புகழ்மிக்க கவி செயங்கொண்டார் ஒருவரே.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இறைவனைத் தொடர்ந்து அரசனையும் பாடு பொருளாக்கும் பகிர்வுரிமையை வழங்கியது சிற்றிலக்கியம் செய்த சிறு புரட்சி. குறவஞ்சி – பள்ளு போன்ற வடிவங்களில் விளிம்பு நிலை மக்களையும் பாடி முடித்தது சிற்றிலக்கியம் செய்த பெரும் புரட்சி. கோவை – உலா – பிள்ளைத்தமிழ் – அந்தாதி – கலம்பகம் – தூது – குறவஞ்சி – பள்ளு – மடல் – மாலை என விரியும் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் பரணியும் ஒன்று.

தக்கயாகப் பரணி – மோகவதைப் பரணி – பாசவதைப் பரணி – கஞ்சவதைப் பரணி – இரணியவதைப் பரணி – சூரன்வதைப் பரணி எனப் பரணிகள் பலபட விரியினும் பரணிகளுக்கெல்லாம் தலைமை பூணத்தக்கது கலிங்கத்துப்பரணிதான் என்பது செவ்விலக்கியச் சம்மதம் பெற்ற செழுஞ்செருக்காகும்.

பரணி என்பது நாள் விண்மீன்களுள் ஒன்று. அது கொற்றவைக்குரியது என்று குறிக்கப் பெறுவது. கொற்றவை போர்க்கடவுள். ஆதலின் போரில் பெற்ற வெற்றியை அவளுக்கே படையலிட்டுக் கொண்டாடுவது பெருவழக்கு. “காடுகெழு செல்விக்குப் பரணி நாளில் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவ தொரு வழக்கு” என்பார் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய பேராசிரியர். அதனால் அந்தக் கொண்டாட்டத்தைப் பாடும் இலக்கியமும் பரணியென்றே பெயர் பூண்டது.

வேறெந்த இலக்கியத்திலும் காணவியலாத தனிச்சிறப்பொன்று பரணியின் தலைப்புக்குண்டு. வென்றவன் பெயரில் விளங்காமல் தோற்றவன் பெயரில் துலங்குவதுதான் பரணியின் தனிச்சிறப்பு. அதனால்தான் வென்றெடுக்கப்பட்ட நாட்டையே கலிங்கத்துப்பரணி தன் தலையில் தூக்கி வைத்துத் தலைப்பாக்கியிருக்கிறது. இது தோற்றவரையும் பெருமைப்படுத்தும் தமிழின் தூய பண்பாடாகும்.

ஈசல் பிடிப்பதெல்லாம் வேட்டையில் சேராது என்பதுபோல, களத்திற்காணும் எல்லா வெற்றிகளுமே பரணிக்குப் பாடுபொருள் ஆகா. எவனொருவன் பகைவரின் ஆயிரம் யானைகளை வெட்டிச் சாய்த்து வெற்றி கொள்கிறானோ அவன் மீது மட்டுமே பரணி பாடப்படும். “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற / மான வனுக்கு வகுப்பது பரணி” என்பது இலக்கண விளக்கப் பாட்டியல்.

ஆயின், கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் யார்? முதலாம் குலோத்துங்க சோழனே கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் என்பது வரலாற்று வழக்கு. ஆணையிட்டவன் குலோத்துங்கனாயினும் களத்திலே ஆயிரம் யானை வென்றவன் படைகொண்டு சென்ற கருணாகரத் தொண்டைமான். ஆதலின் நாட்டுடைத் தலைவன் குலோத்துங்கனாகிறான்; பாட்டுடைத் தலைவன் கருணாகரனாகிறான்.

வண்டையர்கோ என்று வழங்கப்படும் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் தோன்றல் என்று பாடுகிறது தாழிசை. பிற்காலச் சோழர்கள் பேரரசுகட்டி எழுந்தபொழுது, பல்லவர் பரம்பரை தேய்ந் தழிந்து போனாலும் ஓய்ந்தொழிந்து போகவில்லை. தங்கத்தின் மூலக்கூறு பிரித்தால் அது இறுதிவரை தங்கமாகவே திகழ்வதுபோல, குறுநில மன்னனாய்க் குறுகிப்போனாலும் பல்லவர் பரம்பரையின் மன்னர்குலத்து மரபணுக்கள் கருணாகரத் தொண்டைமானின் உதிரத்தில் அதிர்ந்துகொண்டேயிருந்தன. குலோத்துங்கனின் தலைமை அமைச்சராகவும், படைத்தலைவனாகவும் இரு தோள்களிலும் இருபெரும் பாரம் சுமந்தவன் கருணாகரத் தொண்டைமான்.

“வண்டை வளம்பதி பாடீரோ / பல்லவர் தோன்றலைப் பாடீரோ” என்ற கவிச்சான்று கொண்டு, அவன் ஊர் காஞ்சி மாவட்டத்தில் சென்னை – செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வண்டலூர் என்றே வரலாறு நம்பி வந்தது. ஆனால், ஆராய்ச்சி அறிஞர் மு.ராகவையங்கார் சுட்டிக்காட்டிய ஒரு சரித்திரச் சாசனம் உண்மையான ஊரை மீட்டெடுத்தது. கருணாகரத் தொண்டைமானின் மனையாள், கோவில் ஒன்றுக்குத் திருநுந்தாவிளக்கிட்ட சேதி சாசனம் ஒன்றில் காணக் கிட்டியது.

“சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுத் திருநறையூர் நாடு வண்டாழஞ் சேரியுடை யான் வேளான் கருணாகரரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளினி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு” (S.I.S NO: 862) என்பது சாசன வாசகம். இதிலிருந்து வண்டாழஞ்சேரியே கருணாகரன் சொந்த ஊர் என்று விளங்குகிறது.

ஆயின், வண்டாழஞ்சேரி சோழநாட்டில் எங்குளது என்று நிலவியல் நேர்க்கோட்டில் ஆராய்ந்தால் – இன்று கும்பகோணத்தின் நாச்சியார்கோவிலுக்கு அருகே வண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் சிற்றூரே என்று தெரிகிறது. வரலாற்று நாயகன் பிறந்த மண்ணென்று வண்டுவாஞ்சேரி மக்கள் இந்த ஊரைக் கொண்டாடிக்கொள்ளலாம். இந்த வண்டாழஞ்சேரிக் கருணாகரன்தான் கலிங்கத்துப்பரணிக்குக் கருப் பொருள் தந்தவன். கலிங்கத்துப்பரணி தமிழர் வீரத்தைத் தடவிப் பார்க்கக் கிடைத்த தழும்பு.

கடவுள் வாழ்த்து – கடை திறப்பு – காடு பாடியது – கோயில் பாடியது – தேவியைப் பாடியது – பேய்களைப் பாடியது – பேய்முறைப்பாடு – அவதாரம் – இந்திரசாலம் – இராசபாரம்பரியம் – காளிக்குக் கூளி கூறியது – போர் பாடியது – களம் பாடியது போன்ற உறுப்புகளையும், 54 சந்த வேறுபாடுகளையும், 599 தாழிசைகளையும் கட்டி எழுப்பியது கலிங்கத்துப்பரணி.

யுத்தச் சத்தம் கேட்பதற்கு முன்னால் முத்தச் சத்தம் கேட்கச் செய்கிறது கலிங்கத்துப்பரணியின் கடைதிறப்பு என்னும் கலை உறுப்பு. ஒரு புறத்திணை இலக்கியம் அகத்திணையோடு தொடங்குவதே ஓர் அழகு. களங்காணச் சென்ற கணவன்மார்கள் காலங்கடந்தும் மீளாமை கண்டு காதல் நோயால் மனைவிமார்கள் தவிக்கும் தவிப்பே கடைதிறப்பின் பாடுபொருள். இதுவரை காணாத கலவி இன்பத்தைக் கனவு காணும் ஒரு பெண்ணுக்கும், கண்ட கலவி இன்பத்தை மீண்டும் காணத் துடிக்கும் ஒரு பெண்ணுக்குமான உளவியல் அசைவுகள் வெவ்வேறு. இதில் இரண்டாம் வகைப் பெண்களின் தட்பவெப்பமான மனநிலையைச் செப்ப நுட்பமாகச் சித்திரித்துச் சிலம்பாடுகிறார் செயங்கொண்டார்.

அதோ வந்துவிட்டார் கணவர் என்று ஓடிச்சென்று திறக்கிறார்கள் கதவை. அய்யோ வரவில்லை என்று ஓங்கிச் சாத்துகிறார்கள் அதே கதவை. ஒரு முறையா இரு முறையா விடிய விடிய இதுதான் நிகழ்கிறது. இரவு தேய்ந்து கழிந்ததோ இல்லையோ கதவு தேய்ந்து கழிந்தது. “வருவார் கொழுநர் எனத் திறந்தும் / வாரார் கொழுநர் என அடைத்தும் திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திறமினோ” – என்பது கடைதிறப்பில் ஒரு மடைதிறப்பு.

இதயத்தின் தேய்மானத்தை அளக்கவியலாது. காரணம் அதைக் கண்கொண்டு காணவியலாது. ஆயின் அதை அளப்பதெங்ஙனம்? கண்ணுக்குத் தெரிந்த இரும்பின் தேய்மானத்தைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத இதயத்தின் தேய்மானத்தைக் கணக்கிட்ட கணக்காளன் கவி செயங்கொண்டான்.

கலவியெனும் உயிரின் உன்னதப் பொழுதில் நயத்தக்க நாடகம் ஒன்றை நடத்திக் காட்டவும் தெரிகிறது போர்பாட வந்த புலவனுக்கு. கலவி என்பது, நான் என்ற பொருள் அழிந்து, நாம் என்ற நிலை கடந்து, இரண்டென்ற பொருள் மறந்து, ஒன்றென்று உயிர் உணர்ந்து இறுதியில் இருந்தும் இல்லாத நிலை எய்தும் இயற்கைத் திருச்செயல்; பேரண்டத் தில் தான் என்பது போக, தனக்குள் பேரண்டம் என்று ஒருகணம் உணர்த்திப்போகும் மனோமாயம். மனித வாழ்வில் உணர்வு நிலை கழியாமல் அறிவழியும் கணங்களே உயிரின் உச்சம். அப்படிப்பட்ட உயிரின் உச்சப் பொழுதில் கருத்தழிகிறார்கள் சில காதல் மனையாட்டிகள்.

பாம்பு உரித்த சட்டையைப்போல் உடலுக்கு வெளியே ஓடி விழுந்து கிடக்கிறது அவர்கள் உடுத்த உடை. ஆழ்மனது சொல்கிறது உடையற்ற உடலை மூடு என்று. உடனே கைக்கெட்டும் ஓர் ஆடையை எடுக்கிறது அழிந்து கிடக்கும் அறிவு. அவர்கள் எடுத்து உடுத்த எத்தனித்த ஆடை எது தெரியுமா? அது நெசவுத் தறியில் நெய்ததன்று; நிலாத்தறியில் நெய்தது. ஆடையென்று கருதி நிலாவின் கிரணத்தை இழுத்தணிய நினைத்தார்களாம் அந்த நிர்வாண அல்லிகள். “கலவிக் களியின் மயக்கத்தே / கலைபோய் அகலக் கலைமதியின் / நிலவைத் துகில் என்று எடுத்துடுப்பீர் / நீள்பொற் கபாடம் திறமினோ?” என்று பனை ஓலையில் உழுது போகிறது செயங்கொண்டானின் சிருங்கார எழுத்தாணி.

களம் பாடுவதற்கு முன்பு காடு பாடுகிறது கலிங்கத்துப்பரணி. கொற்றவை குடியிருக்கும் காட்டின் சுட்டெரிக்கும் வெம்மையைச் சுட்டுவதன் மூலம் களத்துக்கான தளத்தைக் கட்டமைக்கிறார் கவி. இது – ஒரு கொல்லன் ஆயுதஞ் செய்வதற்கு முன் இரும்பைப் பழுக்கக் காய்ச்சும் ஒழுக்கம் போன்றது.

காளி வதியும் காடு கடுங்காடு. சூரியக் கதிர்களால் பூமி என்ற தட்டை ஓட்டில் வறுபடுங்காடு. அங்கே உலர்ந்து கிடக்கும் ஓமை மரங்கள், புகைந்துகொண்டிருக்கும் வீரை மரங்கள்; பொரிந்துகிடக்கும் காரைச்செடிகள்; கரிந்து கிடக்கும் சூரைச்செடிகள்; பிதிர்ந்த முள்ளி; சிதைந்த வள்ளி; உணங்கிய நெல்லி; உதிர்ந்த வெள்ளில் ஆகிய தாவரக் குடும்பம் சரிந்து கிடக்கும். வாகை மரங்களும் கூகை மரங்களும் வற்றிக் கிடக்கும்; வேலமரங்கள் மடிந்துகிடக்கும்; புங்க மரங்கள் உதிர்ந்து கிடக்கும்.

பறந்துபோகும் பருந்தின் நிழல் நிலத்தில் விழு கிறது. பறவை பறக்கும்போது நிழலும் பறக்கிறது. கவி சொல்கிறார் : “அந்த நிலத்தின் வெம்மை தாளாமல் அந்த அனல்காட்டை விட்டு நிழல்கூட அஞ்சி ஓடுவதுபோல் இருக்கிறது”.

நெருப்பைத் தகடு செய்த காடு. அதிலிருந்து கனலும் அனல் நெருப்பாய்த் தெரிகிறது. அங்கிருந்து பறக்கும் புறாக் கூட்டம் தீயில் கிளம்பும் புகையாய்த் தெரிகிறது. “செந் நெருப்பினைத் தகடுசெய்து பார் / செய்த தொக்கும்அச் செந்தரைப் பரப்பு / அந் நிலத்தினில் புகை திரண்டது / ஒப்பிலது ஒப்புறா அதன் இடைப்புறா.”

ஒரு காட்டுக்கே பெய்ய வேண்டிய மழையை ஒரு கழனியில் கொட்டித் தீர்த்துவிடும் மேகம்போல் ஒரு பேரிலக்கியம் படைக்கும் பேராற்றலைச் சிற்றிலக்கியத்துக்குச் செலவிட்டிருக்கிறார் செயங்கொண்டார்.

கொற்றவைக் காட்டில் கூத்தன்தேவி யைச் சுற்றிக் கூத்தாடும் பேய்களைக் கோரச் சித்திரம் தீட்டிப் பயங்காட்டுகிறான் செயங்கொண்டான். பேயும் பேய் சார்ந்த குறிப்புகளையும் எல்லா உலக இலக்கியங்களும் ஏந்தியே வந்திருக்கின்றன. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஓர் உலகத்தைப் பாடிக்காட்டுமொரு படைப்புக் கலை, எல்லா மொழிக் கவிகளுக்கும் இருந்தே வந்திருக்கிறது. மகாகவி ஷேக்ஸ்பியரும்கூட ‘மாக்பெத்’தின் பயணத்தில் சில மாயக்காரிகளை வருணிக்கிறார்.

“இவை என்ன! இவற்றின் ஆடைகள் சருகுபோல் உலர்ந்து அச்சமூட்டுகின்றனவே; மண்ணுயிர் களைப்போல் இல்லையே! உலர்ந்த உதடுகள்; சூம்பிய விரல்கள். நீங்கள் பெண்களாகத்தான் இருக்கவியலும். ஆனால், தாடியோடு திரியும் உங்களை எப்படிப் பெண் என்பது?” – இவ்வளவுதான் பேய்கள் போன்ற மாயக்காரிகள் குறித்து ஷேக்ஸ் பியரின் சித்திரம். ஆனால், பேய்களை வர்ணிக் கிறானே செயங்கொண்டான் என்ற செந்தமிழ்க் கவி! அவன் பேய்பிடித்தவனைப் போல் பெருந்தாழிசை பாடுகிறான்.

“அந்தப் பேய்கள் பனைமரங்களொத்த கையின, காலின; பிலம்போன்ற வாயின; என்பும் நரம்பும் துருத்தித் தோன்றும் உடலின; ஓந்திகள் கோத்த பாம்பினைத் தாலியாய் அணிவன; பாசிபட்ட துளை களையுடைய மூக்கின; ஆந்தையும் வவ்வாலும் உட்புகுந்து உலாவும் செவியின; மண்வெட்டியும் கலப்பையும் கோத்து வைத்தாற்போன்ற பல்லின; வானைத் தட்டித் தகர்க்கும் தலையின; மார்பின் மேலே துவண்டுதொங்கும் உதட்டின.”

அவன் கூறுகிறான், “கொட்டும் மேழியும் கோத்த பல்லின / கோம்பி பாம்பிடைக் கோத்தணி தாலிய / தட்டி வானைத் தகர்க்கும் தலையின / தாழ்ந்து மார்பினைத் தட்டும் உதட்டின.”

இந்தப் பேய்களின் கண்கள் வழியாகத்தான் களப்போரைக் கட்டமைக்கிறான் கவி.

உலகத்தின் மிகப் பெரிய பாடுபொருள் போர். மண்ணையும் பெண்ணையும் உணவை யும் கவர்வதற்கோ காப்பதற்கோ மீட்பதற்கோ தலைப்பட்ட மனிதன் முதல் போரைத் தொடங்கிவைத்தான். ஆயுதங்களையும் ஆட்களை யும் மாற்றி மாற்றி அதே போர் இன்றும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. உலக இலக்கியத் தின் மிகப் பெருங்காவியம் என்று கருதப்பெறும் ஹோமரின் ‘இலியட்’டில் போர் குறித்த சித்திரமொன்று வீறுணர்ச்சியோடு வெளிப்படுகிறது.

“ஆஷ் மரங்களும் கார்னெல் மரங்களும் அடர்ந்த காட்டைப் பெருமூச்செறியச் செய்து, கிழக்குக் காற்றும் மேற்குக் காற்றும் மலைப் பள்ளத்தாக்கில் பேரோசையோடு சண்டையிட்டுக்கொள்வதைப் போல டிரோஜன்களும் கிரேக்கர்களும் முட்டி மோதினர்”.

செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியோ வேலெறிந்து விண்ணை மறைக்கிறது; அம்பெறிந்து மண்ணை மறைக்கிறது. ஒரு போர்க்களத்தைப் படிம அடுக்குகளால் காட்சிப்படுத்துவது கவிஞர்களுக்குக் கைவந்த கலைதான். ஆனால், போரின் ஒலிகளைக்கொண்டு காட்சிகளைக் கட்டி எழுப்பும் தாழிசைச் சந்தம் செயங்கொண்டானைப் போல முன்னெவர்க் கும் வினைப்பட்டதில்லை என்று ஆயிரம் மன்றங்களில் ஆணையிடலாம். படைகளும் படைகளும் எதிர்கொண்டது கடல்களும் கடல்களும் எதிர்கொண்டது போன்றதாகும். பரியொடு பரிகள் எதிர்கொண்டது அலைகளும் அலைகளும் எதிர்கொண்டது போன்றதாகும். இதை ஒலிச்சித்திரமாய் உணர்த்திக் காட்டுகிறது தாழிசை ஓசை.

“எறிகடலொடு கடல் கிடைத்தபோல் / இருபடைகளும் எதிர் கிடைக்கவே / மறிதிரையொடு திரை மலைத்தபோல் / வருபரியொடு பரி மலைக்கவே” இந்த ஒலி ஊர்வலத்தைக் கடக்குமுன்னே காட்சிப் படிமம் கண்ணை மிரட்டுகிறது. குருதி நதியாகிறது; அதில் மிதக்கும் வெண்கொற்றக் குடைகள் நுரை களாகின்றன. துண்டிக்கப்பட்ட யானையின் கரமோ நதியிருபுறமும் கரையாகிறது.

ஒரே ஒரு தற்குறிப்பேற்றத்தில் உலகக் கவிகளையெல்லாம் ஓரங்கட்டுகிறான் செயங்கொண்டான். வெட்டி வீழ்த்தப்பட்ட யானையின் துதிக்கை சுருண்டு வீழ்கிறது. அதில் பாய்ந்திருந்த அம்பு களெல்லாம் வட்டத் துதிக்கையில் ஆரங்களாய்த் தோன்றுகின்றன. துதிக்கை வட்டமாகிவிட்டது; அம்புகள் ஆரங்களாகிவிட்டன. இப்போது உருமாறிப்போன யானையின் அக்கரங்கள் சக்கரங்களாகிவிட்டன என்று எக்களிக்கிறான் செயங்கொண்டான். “மத்த யானையின் கரம் / சுருண்டு வீழ வன்சரம் / தைத்த போழ்தில் அக்கரங்கள் / சக்கரங் கள் ஒக்குமே.”

ஒலியோடும் பொருளோடும் தமிழோடு போட்டி யிட முடியாது உலகில் யாரும்.

கலிங்கத்துப் பரணியின் அறங்கேற்றத்தின்போது செயங்கொண்டான் பாடப் பாட ஒவ்வொரு தாழிசைக்கும் ஒரு பொற்றேங் காய் உருட்டுவானாம் கொற்றவன் குலோத்துங்கன். 550 முதல் 600 கிராம் நிறைகொண்டது ஒரு தேங்காய் எனக் கொள்ளலாம். சற்றொப்ப 12 சொற்கள் கொண்டது ஒரு தாழிசை எனலாம். இது உண்மையாயின் ஒரு சொல்லுக்கு 50 கிராம் தங்கம் பெற்றவன் உலகிலேயே தமிழ்க் கவிஞன் ஒருவன் மட்டும்தான்.

போரில் புறங்கண்ட வடகலிங்க மன்னன் அனந்த வன்மன், மலையொன்றில் ஏறிக் குகை புகுந்தான். அந்த மலையினைச் சோழ வீரர் சூழ நின்றனர் வில்லாலும் வேலாலும் வேலி கோலி. கருணாகரத் தொண்டைமான் அவனைக் கைது செய்து அழைத்து வந்து குலோத்துங்கனைக் கும்பிட வைத்தான். இந்த வெற்றியைக் கொண்டாடித்தான் கொற்றவை காட்டுப் பேய்கள் ஒரு பரணி நாளில் கூழ் அட்டுக் குடித்துக் கொண்டாடிக் கூத்தடிக்கின்றன. “அகோ பேய்களே! கூழ் அடுவதற்கு முன்னால் குருதி ஆற்றிலே குளித்தெழுங்கள். யானையின் ஒடிந்த தந்தமெடுத்துப் பல் துலக்குங்கள். கொழுப்புகளை உலர்த்தி விரித்து உடை உடுத்துங்கள். யானை மதநீரில் தரை மெழுகுங்கள். முத்துப்பொடிகளில் கோலமிடுங்கள். யானை மத்தகத்தில் அடுப்புக் கூட்டுங்கள். யானைப் பானையில் உலையிடுங்கள். குந்தம் – பகழி – கோல் – வேல் கொண்டு அடுப்பெரியுங்கள். பகைவரின் பல்லரிசி எடுத்து முரசமென்ற உரலிலிட்டுத் தந்த உலக்கைகளால் குற்றி எடுங்கள்” என்று ஆணையிட்டுக் கூழ் சமைத்துப் பந்திகொண்ட பிறகு, தாம்பூலம் தரிக்க வேண்டும் என்ற பேராவல் எழுகிறது பேய்களுக்கு.

பேய்களின் பெருநோக்கில் தாம்பூலம் தயாரிக்கப்படுகிறது. குதிரைகளின் செவிச் சுருளே வெற்றிலையாய், குதிரைக் கால்களின் பிளந்த குளம்பே பெரும்பாக்காய், பகைவர்களின் கண்ணின் வெண்மணியே சுண்ணாம்பாய்த் தாம்பூலம் தரிக்கிறது பெரிதினும் பெரிது கேட்கும் பேய்க்கூட்டம்.

இப்போது எழுகிறது ஒரு வினா. இதுவா சிற்றிலக்கியம்?

தலைமகனாய்ப் பிறந்தவனைச் சின்னச்சாமி என்று பெயரிட்டு அழைப்பதொக்கும் கம்பனின் யுத்த காண்டத்துக்கே வழிகாட்டிய இந்தப் பேரிலக் கியத்தைச் சிற்றிலக்கியம் என்று செப்புவது.

போரிலக்கியம் என்பது பேரிலக்கியம் என்று பேசப்பட்டபோதிலும் தமிழ்ச் சமூகம் போர்நெறிச் சமூகமன்றிப் போர்வெறிச் சமூகமன்று. மூண்ட போர்களைக் கொண்டாடும் அதே வேளையில், போர்கள் மூண்டுவிடக் கூடாது என்ற செழுமிய விழுமியம் தமிழச் சாதியால் பெரிதும் பேணப்பட்டே வந்திருக்கிறது. “இருவீர் வேறல் இயற்கையு மன்று / ஒருவர் தோற்பினும் தோற்பது நுங் குடியே” என்று போருக்கு எதிரான குரலே புறப்பாட்டில் கேட்கிறது.

சோழப் பேரரசை வேலாலும் வாளாலும் விரிவு செய்துகொண்டிருந்த போர்ச் சமூகத்திலும் “யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் / போரொடுங்கும் தன் புகழ் ஒடுங்காது” என்ற கம்பன் குரலும் அதையே வழிமொழிகிறது.

இரண்டாம் உலகப்போரில் சேமித்துவைத்த பிணங்களின் கொழுப்பிலிருந்து வழலை (சோப்) செய்தும், தட்டி எடுத்த பிணங்களின் தங்கப்பற்களில் ஆபரணம் செதுக்கியும், எலும்புகளிலிருந்து உரம் தயாரித்தும் ஆதிக்கசக்திகள் அநாகரிகம் நிகழ்த்திய காலையில் – “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட / போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்” என்ற தமிழ்க் கவியின் உலகக் குரல் நமது பண்பாட்டின் சாரமென்றும் ஈரமென்றும் அறியப்படுகிறது.

கலிங்கத்துப்பரணியும் போர் முடித்த பிறகு ஒரு பொன்னுலகையே கனவு காணுகிறது. பேய்களின் பெருவாழ்த்தோடுதான் பரணி நிறைகிறது. உலகமாந்தர் களிக்கட்டும்; இயற்கையின் இன்னருள் தழைக்கட்டும்; பூதலத்தார் புகழ் பரவட்டும்; வையகம் நிலைக்கட்டும்; வான்மழை சுரக்கட்டும் என்று அமைதியின் ஆட்சியைத்தான் இறைஞ்சுகிறது. “யாவரும் களி சிறக்கவே / தேவர் இன்னருள் தழைக்கவே / பூதலம் புகழ் பரக்கவே / புவி நிலைக்கவே புயல் சுரக்கவே” என்று பேய்கள் வாழ்த்துகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: