மதுரை:
‘மதுரை அருகே கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விபரங்களை, மத்திய தொல்லியல் துறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டுள்ளது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரையிலிருந்து, 17 கி.மீ., துாரத்திலுள்ள கீழடியில், 110 ஏக்கரில் ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய தொல்லியல் அகழாய்வு நடக்கிறது. இந்நாகரிகம், 2,000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. கீழடியில், பழங்கால பொருட்களை மத்திய தொல்லியல் துறையினர் சேகரித்துள்ளனர். அப்பொருட்களை, பெங்களூரிலுள்ள அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல, மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். கீழடியில் மியூசியம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கனிமொழி மதி மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு, ‘கீழடி அகழாய்வில் என்னென்ன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை மத்திய தொல்லியல்துறை, இயக்குனர் ஜெனரல், மார்ச் 13ல், அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டது.