200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து தங்கக் காசு வெளியிட்ட எல்லீஸ் துரை!

200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து தங்கக் காசு வெளியிட்ட எல்லீஸ் துரை!

200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்டது ஆங்கிலேய ஆட்சியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் எனத் தெரியவந்துள்ளது.

இந்தியாவை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் 1812-ல் தென்னிந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்று விக்க முடிவு செய்தனர். இதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ‘தி மெட்ராஸ் காலேஜ்’ (The Madras College) நிறுவப்பட்டது. இக்கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis).

தமிழை நன்கு கற்று செய்யுள் எழுதும் அளவுக்கு தனது மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்ட அவர் தமிழ் மீது கொண்ட காதலால் தனது பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். கி.பி.1796-ல் ஆங்கிலக் கிழக் கிந்தியக் கம்பெனியில் எழுத்தாளராகச் சேர்ந்த எல்லீஸ், படிப்படியாக உயர்ந்து 1810-ல் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆனார். சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை, மதுரையில் எல்லீஸ் நகர் ஆகியவை இவர் நினைவாக பெயரிடப்பட்டவை ஆகும்.

எல்லீசால் இந்திய மொழிகளை ஆங்கிலேயருக்குப் பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிறு வப்பட்ட ‘சென்னைக் கல்விச் சங்கம்’ எல்லீஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியது. இக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய முத்து சாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவர் எழுதிய நூல்களைத் தேடிப்பிடித்துப் பாதுகாக்கச் செய்தார்.

எல்லீஸ் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன் திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.

1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது, திருக்குறளைப் படித்ததன் பயனாக அங்கு 27 கிணறுகளை வெட்டினார். அவற்றுள் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரிய பாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீசின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது நாணயச்சாலையின் தலைவராகவும் இருந்ததால், திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து அவருக்கு தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய 7 மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், அம்மொழிக் குடும்பத்துக்குத் தென்னிந்திய மொழிக் குடும்பம் எனவும் பெயரிட்டார். வட மொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன் முதலில் கூறியவரும் இவரே.

எல்லீஸுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி ராபர்ட் கால்டுவெல் தனது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1818-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் 3 மாதம் பணியிலிருந்து விடுப்புக் கோரியிருந்தார். விடுப்பில் இருந்தபோது தமிழாய்வுப் பணிகளுக்காக மதுரைக்கும், அங்கிருந்து ராமநாதபுரத்துக்கும் சென்றார். ராமநாதபுரத்தில் இருந்த போது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டார். கி.பி.1819-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென காலமானார்.

இவருடைய கல்லறை ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ளது. இவருடைய கல்லறைக் கல்வெட்டுகள் தமிழில் கவிதை வடிவிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த செய்தி சொல்லப்படுகிறது.

மேலும் வெள்ளைப் பளிங்குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள் தற்போது ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ளன.

  • தமிழ் இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: