மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுக்கு முந்தைய 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு…!

இந்த வகையான குறியீடுகள் தமிழி எழுத்துகளுக்கு முற்பட்ட எழுத்து வடிவமான குறியீடுகளாக இருக்கலாம் எனவும், சுமார் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகளாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சுமார் 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தமிழி எழுத்துகளுக்கு முந்தைய எழுத்து வடிவமான குறியீடுகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தகவல்.

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு பெறும் நிலையில் கீழடியை போல் தென் மாவட்டங்களில் தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன. அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ந்து பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மூவாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம் கிடைத்துள்ளதால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வகுரணி மொட்டமலை பகுதியில் உள்ள புலிப்புடவு குகையில் சுமார் மூவாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சிவப்பு நிறத்தில் புலி உருவமும், அபூர்வமாக கிடைக்கும் பெண் ஓவியங்கள் மற்றும் புள்ளிகளிலான மனித ஓவியம், குறியீடுகளாலான பல்வேறு ஓவியங்கள் இந்த குகையில் வரையப்பட்டுள்ளன. இந்த குறியீடுகள் தமிழி எழுத்துகளுக்கு முற்பட்ட எழுத்து வடிவமான குறியீடுகளாக இருக்கலாம் எனவும், சுமார் மூவாயிரம் ஆண்டு பழமையான குறியீடுகளாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.

மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு வகையான புலிக்குத்திக் கல், பாறை ஓவியங்கள் மற்றும் தமிழி எழுத்துக்கள் நிறைந்த கல்வெட்டுகள் மற்றும் இரும்பு உலை என கீழடிக்கு இணையான தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வரும் சூழலில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான அகழாய்வு மேற் கொண்டால் பல்வேறு தொல்லியல் வரலாறுகளை மீட்டெடுக்கலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: