‘தமிழ்த் தேசியப் போராளி’ அண்ணல் தங்கோ!

'தமிழ்த் தேசியப் போராளி' அண்ணல் தங்கோ!

‘தமிழ்த் தேசியப் போராளி’ அண்ணல் தங்கோ!

தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தொடங்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் திராவிட இயக்கத்தினர் பலரை தனித் தமிழில் பெயர் சூட்டும் படி செய்தது. அது பேராயக் கட்சியை சார்ந்த ஒருவரையும் ஈர்க்கும் படி செய்தது. அவர் வேறு யாருமல்ல; ‘தூய தமிழ்க்காவலர்’ என்று அனழக்கப்படும் அண்ணல் தங்கோ அவர்கள் தான். 1936ஆம் ஆண்டு தனித்தமிழ் மீது தீராப் பற்று கொண்ட காரணத்தால் சாமிநாதன் என்ற வடமொழிப் பெயரை நீக்கம் செய்தார். அப்போதே பேராயக்கட்சி என்பது ஆரியத்திற்கு பாடுபடும் கட்சி என்பதாக உணர்ந்து அதிலிருந்து விலகினார்.

காங்கிரசில் இருந்த போது 1927ஆம் ஆண்டு புரோகிதம் மறுத்து சிவமணியம்மையார் என்பவரை மணம் செய்து கொண்டார். தமிழகத்தில் திருக்குறள் ஓதி நடத்திய முதல் புரட்சி திருமணமும் இது தான். அந்த ஆண்டில் தான் அண்ணல் தங்கோ நடத்திய கொடுங்கோலன் நீலன் சிலை உடைப்புப் போராட்டம் மிக முக்கியமானது. இப்போராட்டம் காரணமாக சென்னை அண்ணாசிலையில் இருந்த நீலன் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டு எழும்பூர் தொல்பொருள் காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு நீதி மன்றத்தால் ஓராண்டு சிறைத் தண்டனையும் கிடைத்தது.

1937 ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையை தொடங்கி, உலகத் தமிழ் மக்களே! ஒன்று சேருங்கள்! தமிழ்த் தாயைத் தனியரசாள வையுங்கள்! என்று முழக்கம் செய்தார். அவ்வாண்டிலே தை முதல்நாளில் ‘தமிழர் திருநாள் விழா’ பெயரில் தமிழ்ச்சான்றோர்களை சிறப்பித்து பாராட்டுரை வழங்கினார். தமிழர் திருநாள் விழாவை அறிமுகம் செய்து வைத்த தமிழறிஞர் கா.நமச்சிவாயம் வழியில் இந்நிகழ்வை தொடர்ந்து நடத்தி வந்தார்.

அண்ணல் தங்கோ ஒரு சிறந்த பாவலரும் கூட. 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் அவர் எழுதிய “நேற்று பிறந்த மொழி! முத்தம்மா! நீட்டி அளக்குதடி! ஆற்றல் நிறைந்த தமிழ்! முத்தம்மா! ஆட்டங் கொடுக்குதடி!” பாடல் தமிழரை தட்டியெழுப்பிய பாடலாகும். பராசக்தி திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் வரும் “எல்லோரும் வாழ வேண்டும் -உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்” பாடல் இவர் எழுதியதே!

முதல் இந்தி எதிர்ப்புப் போரில் 15.1.1939 இல் முதல் களப்பலியானவர் நடராசன். அவரின் கல்லறையில் நின்று கொண்டு “நடராசன் அவர் குடிக்கு ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான், திருமணம் செய்வோம் என பெற்றோர் எண்ணியிருந்தனர். மணக்கோலத்தில் போக இருந்தவர் இப்படி பிணக்கோலத்தில் சென்று விட்டாரே” என்று அண்ணல் தங்கோ உருக்கமாக உரையாற்றிய போது கண் கலங்காதவர்களே இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

ஈ.வெ.ராமசாமி பெரியாரோடும் அவர் நீதிக்கட்சியில் பணி புரிந்தார். 1941இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழர்கள் தங்களை திராவிடர் என்று குறிக்காமல் “தமிழர்” என்று குறிக்கும் படி வேண்டினார். இக்கருத்தை முதலில் ஒப்புக் கொண்ட ஈ.வெ.ரா.பெரியாரும், அண்ணாவும் பின்னர் மறுப்பு தெரிவித்தனர். தமிழரல்லாதார் நலன் காத்திடும் வகையில் திராவிடர் என்று குறிப்பிடுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீதிக்கட்சி நடத்திய ஏடுகளெல்லாம் தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திரப் பிரகாசிகா, ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்றும் பெயர் வைத்து தமிழரின் இன அடையாளத்தை மறுத்து வந்தன. இதைப் புரிந்து கொண்ட அண்ணல் தங்கோ 1942இல் ‘தமிழ் நிலம்’ எனும் ஏட்டைத் தொடங்கினார். அதில் தமிழர் நிலத்திற்கு வேலி இல்லாததை நினைத்து, “வீட்டுக் கரண் வைத்தனை! -வயலுக்கும் வேலி அரண் வைத்தனை, நாட்டுக் கரண் வைத்திலை! தமிழா! இல்லையே???”
என்று பாடல் தீட்டினார்.

1944இல் நீதிக்கட்சி பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் தன் கருத்தை பதிவிட அண்ணல் தங்கோ தயங்க வில்லை. கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தர பாண்டியன், தங்கவேலு ஆகியோரோடு இணைந்து ‘தமிழர் கழகம்’ பெயரை சூட்டிமாறு வாதாடினார். வழக்கம் போல் ஈ.வெ.ரா. பெரியாரும் திராவிடப் பித்து தலைக்கேறி ‘திராவிடர் கழகம்’ என்றே பெயர் சூட்டிட இதை ஏற்க அண்ணல் தங்கோவின் மனம் இடம் தரவில்லை. உடனடியாக அக்கட்சியை விட்டு விலகினார்.

1950ஆம் ஆண்டு கோவையில் தி.மு.க. சார்பில் முத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அண்ணல் தங்கோ அதில் பங்கேற்று “திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே காதிலே நாராசம் ஊற்றியது போல் இருக்கிறது” என்றும் இம்மாநாட்டில் மூவேந்தர் சின்னமான புலி, வில், கயல் பொறித்த தமிழ்க் கொடியை ஏன் ஏற்ற வில்லை? என்றும் சினத்தோடு வினா எழுப்பினார்.

1953இல் ஆந்திரர்கள் தனிமாநிலம் கேட்டதோடு தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிக்க முயன்றனர். அப்போது அதனை எதிர்த்து வேலூரில் தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தி தமிழர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்தார்.

தமிழில் பிறருக்கு பெயர் சூட்டி அழைப்பதிலும் இவருக்கு ஈடு இணை யாருமில்லை என்று தான் கூற வேண்டும். கலைஞர் கருணாநிதி- அருட்செல்வம், சின்னராசு- சி.பி.சிற்றரசு, காந்திமதி- அரசியல் மணி (ஈ.வெ.ரா.பெரியார் துணைவியார் மணியம்மை), தார்ப்பிட்டோ சனார்த்தனம்- மன்பதைக்கன்பன், காமராசர்- காரழகனார், சோமசுந்தர பாரதியார்- நிலவழகனார் ஆதித்தனார்- பகலவனார், சீவானந்தம்- உயிரின்பன், மா.இராசமாணிக்கனார்- இறைமணிச்செல்வர், தருமாம்பாள்- அறச்செல்வியார், இராமநாதன்- தமிழ்வாணன் (கல்கண்டு ஆசிரியர்) என்று நேரில் பேசும் போதும், மடல் தீட்டும் போதும் தமிழ்ப்பெயரிட்டு துணிச்சலாக அழைத்தவர் இவர் ஒருவரே!

தன்வாழ்நாளின் இறுதிவரை “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்று முழங்கி வந்த அண்ணல் தங்கோ 4.1.1974இல் மறைந்தார். அப்போது நேரில் வந்து மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஓவென தலையிலடித்து அழுதார். “தமிழ்மொழி ஒரு தன்னலமற்ற தொண்டனை இழந்து விட்டதே” என்ற படி கதறித் துடித்தார்.

அண்ணல் தங்கோ பிறந்த நாளான இந்நாளில் அவர் தொடுத்த ‘திராவிட’ இனத்திரிபுவாத எதிர்ப்புப் போரை தொடர்ந்து முன்னெடுப்போம்! நம் மொழி தமிழ்மொழி… நம் இனம் தமிழினம்… நம் தேசம் தமிழ்த் தேசம்… என்றே எங்கும் எப்பொழுதும் முழங்கிடுவோம்!

  • கதிர் நிலவன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: