கள்ளக்குறிச்சி அருகே, கி.பி 10-ம் நூற்றாண்டு பிச்சாடனர் சிற்பம் கண்டுபிடிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே, கி.பி 10-ம் நூற்றாண்டு பிச்சாடனர் சிற்பம் கண்டுபிடிப்பு!

சிவமூர்த்தங்கள் 64-ல் ஒன்றான பிச்சாடனார் திருக்கோலத் திருமேனி மீனாட்சியம்மன் கோயில், அண்ணாமலையார் கோயில் என மிகச்சில சிவாலயங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது. தற்போது, திருக்கோவிலூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிச்சாடனர் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் (புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி) தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மணலூர்பேட்டையில் இந்தச் சிற்பம் கிடைத்துள்ளது.

இவ்2ஊரில் இரண்டு சிவாலயங்கள் இருந்துள்ளன. இச்சிற்பம் கிடைத்துள்ள இடம் சிதைந்த ஆலயம் இருந்த இடமாக இருக்கலாம். ஏனெனில், ஒரே இடத்தில் 20-க்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த ஆலயங்களில் பயன்படுத்தப்பட்ட கற்பலகைகள் கிடைத்துள்ளன. அதில் ஒரு கல்லில் இந்தச் சிற்பம் இருந்தது. அந்தச் சிற்பம், பிச்சாடனர் உருவமுடைய புடைப்புச் சிற்பமாகும். பெரும்பாலும் இந்தச் சிற்பங்கள் சிவாலயங்களின் வெளிப்புற சுவற்றின் மாடங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தலையில் வரிசடையும் நாற்கரங்களுமாகச் சிற்பத்தின் உருவமைப்பு உள்ளது. பத்திர குண்டலமும் சரவணி சவடி, ஆரம் போன்ற அணிகலன்களும் உள்ளன. மேற்கரத்தில் வாகு வளையங்களும் காப்பும், மேல் வலது கரத்தில் உடுக்கை, இடது கரத்தில் சூலமும் உள்ளன. தொடை முதல் தோள்வரை புரிநூல். சிற்பத்தின் இடது பக்க முன்கரத்தின்கீழ் செல்வப் பாத்திரம் ஏந்தும் பூதகணம். இடதுகால் நேராக வலதுகால் சற்று மடித்தபடி துவிபங்க நிலை என இந்தச் சிற்பம் அமைந்துள்ளது. பிச்சாடனார் சிற்பம் பீடத்தில் நிற்பதுபோல் இருக்கிறது. இதன் காலம் கி.பி.10, 11-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என அறியபடுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: