இலங்கையின் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வா!

இலங்கையின் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வா!

இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார்.

கெடெட் அதிகாரியாக 1984-ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட சவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றியிருந்தார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் 58-ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையாற்றியிருந்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், சவேந்திர சில்வா மீதும் சுமத்தப்பட்டிருந்தன.

2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின்போது ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இலங்கை போரின்போது மனித உரிமை மீறப்பட்டதாக 2013-ம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சவேந்திர சில்வாவின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டி சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன்படி, இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது, தமிழர்களை அவமதிக்கும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. யுத்தக் குற்ற மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதானது, தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என கூட்டமைப்பு கூறியுள்ளது. இந்த நியமனம் வழங்கப்பட்டமையினால் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தாம் அதிருப்தியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும், நம்பகமானதும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக ஆக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய இராணுவ தளபதியாக நியமித்தமையானது, யுத்தத்தின் போது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின் முழுமையாக குறைபாடாகவே கருதுவதாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தெற்காசிய கிளை தெரிவிக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: