சபாநாயகர் மீது ரணில் – ராஜபக்சே எம்.பி-க்கள் தாக்குதல்! – போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்!

சபாநாயகர் மீது ரணில் - ராஜபக்சே எம்.பி-க்கள் தாக்குதல்! - போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்!

சபாநாயகர் மீது ரணில் – ராஜபக்சே எம்.பி-க்கள் தாக்குதல்! – போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், ராஜபக்‌சே தோல்வியடைந்ததை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மோதல் நிலவி வருகிறது.

முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா. இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.

3 ஆண்டுகள் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென வாபஸ் பெற்ற சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார். சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தததால் இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்தார். அதன்பின், ராஜபக்சேயுடன் (இலங்கை மக்கள் முன்னணி) கூட்டணி அமைத்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்று விக்ரமசிங்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜெயசூர்யாவும் ராஜபக்சே சட்டப்பூர்வ பிரதமர் இல்லை என்று அறிவித்தார். இதனால் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிபர் சிறிசேனா முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா, வரும் 14-ம் தேதி கூடும் என்று அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். திடீர் திருப்பமாக, மகிந்த ராஜபக்சே, நேற்று சிறிசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து வெளியேறி இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்தார். அவருடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் கட்சி மாறியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்றவர்கள்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்ததை எதிர்த்து இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர் ஒருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

முன்னதாக அறிவித்தபடி இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அதில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான எம்.பி-க்கள் அனைவரும் ராஜபக்‌சே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் கூச்சலிட்டனர். இதையடுத்து ராஜபக்‌சே அவரது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்‌சே தோல்வியடைந்தார். மேலும், நேற்றைய கூச்சல் குழப்பத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா, நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்‌சே தோல்வியடைந்துவிட்டார். அதனால் அவரை பிரதமாக ஏற்க முடியாது என அறிவித்தார். இதை எதிர்த்த ராஜபக்‌சே தரப்பு எம்.பி-க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ரணில் ஆதரவு எம்.பி-க்களுக்கும் ராஜபக்‌சே ஆதரவு எம்.பி-க்களுக்கும் இடையே கைகலப்பு நிலவியது.

ரணில் விக்ரமசிங்கேவின் அழுத்தத்தினால்தான் சபாநாயகர் இவ்வாறு கூறுகிறார் என ராஜபக்‌சே ஆதரவு எம்.பி-க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டார். இருந்தும் அவரின் முயற்சி பலனளிக்கவில்லை. அனைத்து எம்.பி-க்களும் எழுந்து போராட்டம் நடத்துவதால் இலங்கை நாடாளுமன்றமே போர்க்களமாக மாறியுள்ளது. உச்சகட்ட பரபரப்பினால் நாடாளுமன்றம் வரும் 21-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிபர் மைத்திரி பால சிறிசேன கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: