தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.
கடந்த 28-ம் தேதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 17 பேரை சிறை பிடித்த இலங்கைக் கடற்படையினர் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஊர்காவல் துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் முன்னிலையில் மீனவர்களின் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கை அரசின் பரிந்துரையைடுத்து மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் ஏற்கெனவே சிறைப்பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் உள்ளிட்ட 10 மீனவர்கள் தவிர மேலும் 11 மீனவர்களையும் இலங்கை அரசின் பரிந்துரைப்படி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் தீபாவளிப் பண்டிகைக்கு முன் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.