கொரோனா தொற்றினால் கனடாவின் ஜவஹர்லால் நேரு தம்பதிகள் பலி!

தமிழர்களால் நேரு ஜயா என அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு குமாரசாமி அவர்கள் சென்ற செவ்வாய் கிழமை (14-04-2020) கொரோனாத் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் மரணமானார். அவர் இறந்த அடுத்த தினமே துணைவியார் ராஜேஸ்வரி புதன் கிழமை (15-04-2020) மரணமடைந்தார்.

இவர்கள் இருவரும் கனடாவில் ரொறன்ரோ ஸ்காப்ரோ பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நீண்டகால பராமரப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக இருவரும் மரணமடைந்துள்னர்.

ஜவரஹர்லால் நேரு அவர்கள் திரு குமாரசாமி – அன்னலெட்சுமி தம்பதிகளின் புதல்வராவார். கீதாஞ்சலி, சுபாஜினி ஆகிய இரு பெண் பிள்ளைகளின் தந்தையாவார். இவர் மோதிலால் நேரு, பாலச் சந்திரன், நெப்போலியன் ஆகியோரின் சகோதரராவார். இவரது சகோதரிகளின் பெயர் விபரம் கிடைக்கப் பெறவில்லை.

யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் 1932ம்ஆண்டு பிறந்து சிதம்பரம் கல்லூரியல் கல்வி பயின்று இலங்கை தபால் அலுவலகத்தின் தலைவராக பணி புரிந்தவர்.

1980-களின் இறுதியில், கனடா வந்த நேரு அவர்கள் கல்வி கற்பதற்கு வயதில்லை என்பதற்கிணங்க தனது 67ம் வயதில் ரொறன்ரோ யோக் பல்கலைக் கழகத்தில் B A சிறப்பப் பட்டத்தை படித்து முடித்தார். அதன் பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பிரன்ச் (French) மொழியையும் கற்றுத் தேறியவராவார்.

1990ம் ஆண்டு வல்வை நலன்புரிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தனது சமூக சேவையை ஆரம்பித்த அவர் உலகத் தமிழர் இயக்கத்தில் மொழி பெயர்பாளராகப் பணியாற்றி, உலகத் தமிழர் பத்திரிகையில் பல அரசியல் கட்டுரைகளை எழுதி கனடியச் செய்திகளின் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ‘கனடா உலகத் தமிழர்’ பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றிய நேரு ஜயா அவர்கள் வயது முதிர்வின் காரணமாக தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவர் மரணிக்கும் வரை தமிழ் தேசியத்தை நேசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரு ஜயா அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவை ஆழ்ந்த அஞ்சலியையும் இறுதி வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

#Covid19 #CoronaTamils

(பி.கு: இவர்களின் மறைவுக்கான காரணம் பற்றி கொரோனா தொற்று என தமிழ் ஊடகங்கள் நண்பர்கள் உறுதிப்படுத்தினாலும் இதுவரை மருத்துவர்களால் காரணம் வெளியிடப்படவில்லை என கூறப்படுகின்றது.)

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: