‘சொன்ன மாதிரியே என் மகன் கலெக்டர் ஆகிட்டான்!’ – கீற்றுப் பின்னும் ஏழைத் தாயின் ஆனந்தம்!

'சொன்ன மாதிரியே என் மகன் கலெக்டர் ஆகிட்டான்!’ - கீற்றுப் பின்னும் ஏழைத் தாயின் ஆனந்தம்!

‘சொன்ன மாதிரியே என் மகன் கலெக்டர் ஆகிட்டான்!’ – கீற்றுப் பின்னும் ஏழைத் தாயின் ஆனந்தம்!

‘நான் படிச்சு கலெக்டர் ஆகிடுவேன்ம்மா அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டபட வேண்டாம் என என் மகன் படிக்கும் போது சொல்லி கொண்டிருப்பான். சொன்னது போலவே செஞ்சுட்டான்’ என தன் மகனை நினைத்து பெருமிதமாக சொல்கிறார் கீற்று பின்னும் கூலி தொழிலாளி தாய்.

இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில அளவில் 3வது இடம் பிடித்து ஐஏஎஸ்-ஆகத் தேர்ச்சி அடைந்துள்ளார் சிவகுருபிரபாகரன் என்ற மாணவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேலஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த பிரபாகரன், இன்று தான் சொன்னது போலவே ஐஏஎஸ் ஆகி தன் குடும்பத்திற்கும், அந்த கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவர் குடும்பத்தில் தாய் கனகா, தந்தை மாரிமுத்து, பாட்டி நல்லம்மாள் என அனைவருக்கும் தொழில், தென்னங்கீற்று பின்னி விற்பது. அந்த வேலை இல்லாத நாட்களில் மரமில்லில் கூலிக்கு வேலை செய்வார்கள். மேலும், போதிய வருமானம் இல்லாததால் மாடு வளர்த்து பால் கறந்து, அதை விற்றும் பிழைப்பு நடத்தியுள்ளனர்.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பத்தில் பிறந்த சிவகுருபிரபாகரன், தொடக்கப்பள்ளி படிப்பை அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அருகில் உள்ள புனவாசல் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும் படித்தார். தொடர்ந்து புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டய படிப்பு முடித்துவிட்டு, சிவில் இன்ஜினியரிங் படிப்பை வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக் படித்த இவர், தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதியதால் ரயில்வேயில் பணி கிடைத்தது. அப்போது, இந்த பணியே போதும் என்று அவரது உறவினர்களும், நண்பர்களும் சொல்லியிருக்கின்றனர். இருந்தபோதும், ‘என் கனவு கலெக்டர் ஆவது. என் அம்மாவிடம் நான் சொன்னதை நிறைவேற்றும் வரை ஓயமாட்டேன்’ என சொல்லி தொடர்ந்து படித்தார்; ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். அதன் பலனாக இன்று மாநில அளவில் 3-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் தன் விடா முயற்சியால், தனது கனவை நனவாக்கி இந்த பகுதி மாணவ, மணவியருக்கு ஓர் உந்துசக்தியாகவும், இந்த பகுதி மக்களைத் தன் வெற்றியால் மகிழ்ச்சியாக்கிய பிரபாகரனை, அவர் படித்த பள்ளி முதல் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களும் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து அவரது அம்மா கனகாவிடம் பேசினோம். ‘என் வயித்துல பிரபாகரன் பிறந்தபோதே கடுமையான வறுமைதான். கூலி வேலை செய்துதான் சாப்பிட்டோம். நாங்க கீற்றுப் பின்னும்போது பள்ளி விடுமுறை நாள்களில், அவனும் கீற்றுப் பின்னுவான். அப்போதெல்லாம், ‘ஒரு நாள் நான் கலெக்டர் ஆவேன், அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டப்பட விடமாட்டேன் அம்மா’ என்று அடிக்கடி சொல்வான். சரி கலெக்டர் ஆவுடா என் ராசா என சொல்வேன். சொன்னது போலவே, இன்று என் மகன் கலெக்டர் ஆகிட்டான். என்னை மட்டும் இல்லை எங்க ஊரையே மாளிகையில் குடியேத்திய மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஊருக்காரவுக எல்லாம் உன் பிள்ளை கலெக்டர் என சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என மகிழ்ச்சி பொங்கச் சொல்லும், அந்த ஏழைத் தாயின் முகத்தில் அத்தனை ஆனந்தம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: