கமுதி அருகே நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

கமுதி அருகே நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

கமுதி அருகே நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் குண்டாற்றின் கரையில் நான்கு விதமான தொல்லியல் களங்களில் நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் ஆகியவற்றை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

கமுதி பேரையூரைச் சேர்ந்த ஆசிரியர் கு.முனியசாமி, பொறியாளர் த.சங்கர் ஆகியோர் தங்கள் ஊரில் திடல்காடு, செம்மண்காடு, செங்கமடைராஜா கோயில், கலுங்கு முனியப்பசாமி கோயில் ஆகிய பகுதிகளில் கள மேற்பரப்பாய்வு மூலம் பழங்காலப் பொருள்களைக் கண்டெடுத்து, அதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு கள ஆய்வு செய்தபின் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, “பேரையூர் கண்மாய்க் கரையில் செங்கமடை ராஜா கோயில் பகுதியில் பெரிய செங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானம் உள்ளது. இங்கு கிடைத்த சிறிது உடைந்த ஒரு முழுச் செங்கல்லின் அளவு நீளம் 30 செ.மீ., அகலம் 17 செ.மீ., உயரம் 6 செ.மீ. ஆகும். இது கி.பி. 1- ம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககால செங்கல் அளவில் உள்ளது. இங்கு கோட்டை இருந்து அழிந்ததாக ஊர்மக்கள் தெரிவித்தனர். மேலும், இங்கு கறுப்பு சிவப்பு, ரௌலட்டட் உள்ளிட்ட பானை ஓடுகளுடன் பச்சை, சிவப்பு, பளிங்கு நிற பாசிமணிகள், யானை தந்தத்தால் ஆன ஆபரணம், கறுப்பு வளையல், மணி செய்யும் கற்கள், சுடுமண் காதணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இங்கு மணிகள் செய்யும் தொழிற்சாலை இருந்திருக்கலாம்.

இதேபோல் பேரையூரிலிருந்து ஆனையூர் செல்லும் வழியில் ரெகுநாத காவிரிக் கால்வாயின் கரையில் உள்ள திடல்காட்டில் நுண்கற்காலக் கருவிகள், சங்ககாலத்தைச் சேர்ந்த ரௌலட்டட் வகை ரோமானிய பானை ஓடுகள், வழுவழுப்பான மற்றும் அலங்கரிக்கப்பட்ட கறுப்பு சிவப்பு பானை ஓடுகள் மற்றும் குவளைகள், தக்களி, சுடுமண் புகைப்பான், சாணைக்கல், கவண்கல், இரும்பாலான அம்பு முனைகள், இரும்புத் தாதுகள், இரும்புக் கழிவுகள், வட்டச் சில்லுகள், சுடுமண் தாங்கிகள், சுடுமண் குழாய், துளையுள்ள பானை ஓடுகள், குறியீடு உள்ள பானை ஓடு, கருங்கல்லால் ஆன நடுவில் குழியுள்ள சிறிய அரைப்புக்கல், குழவிகள், தேய்ப்புக்கற்கள் ஆகியவையும், இடைக்காலத்தைச் சேர்ந்த பழுப்பு நிற செலடன் மற்றும் போர்சலின் வகை சீனப்பானை ஓடுகள், பூண்டு வடிவிலான பெரிய மணி, சுடுமண் கெண்டியின் மூக்குப்பகுதிகள், மூடிகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுண்கற்காலம் கி.மு.10 ஆயிரம் முதல் கி.மு.3 ஆயிரம் வரையிலானது.

ரோமானிய ரௌலட்டட் ஓடுகள் தட்டு வடிவில் பளபளப்பான கறுப்பு நிறத்தில் நடுவில் ரௌலட்டட் வட்டங்களுடன் காணப்படுகின்றன. ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள் கிடைத்துள்ளது வெளிநாட்டு வணிகத் தொடர்புக்கு ஆதாரமாக உள்ளது. இங்கு நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரையிலான பானை ஓடுகள் கிடைப்பதால் கி.மு.10,000 முதல் கி.பி.1,300 வரையிலான காலத்தில் இது மக்கள் வாழ்விடப் பகுதியாக இருந்துள்ளதை அறியமுடிகிறது.

திடல்காட்டின் தெற்கே உள்ள செம்மண்காட்டில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழியின் ஓடுகளும், கறுப்பு சிவப்பு பானை ஓடுகளும் சிதறிக்கிடக்கின்றன. இதை மக்கள் வாழ்விடப் பகுதியான திடல்காட்டின் இடுகாடு எனலாம். அதேபோல் கலுங்கு முனியப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் பெரிய அளவிலான இரு பக்கமும் அரைக்கும் குழி உள்ள அரைப்புக்கல் மற்றும் இடைக்காலப் பானை ஓடுகள் காணப்படுகின்றன.

கீழடி போன்ற ஒரு பழைமையான தொல்லியல் களமாகப் பேரையூர் உள்ளது. இங்கு அனைத்து வகையான தொல்பொருள்களும் மேற்பரப்பாய்விலேயே கிடைத்துள்ளன. நுண்கற்காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இவ்வூர் இருந்துவருகிறது. வைகை போன்ற ஒரு பழைமையான ஆறான குண்டாற்றின் கரையிலிருந்து மறைந்த ஒரு தொன்மையான நாகரிகத்தை, அகழாய்வு மூலம் முழுமையாக வெளிக்கொண்டுவர மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: