ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் எண்களுடன் மைல் கல் கண்டுபிடிப்பு!

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் எண்களுடன் மைல் கல் கண்டுபிடிப்பு!

திருநெல்வேலி மாவட்டம், பிரம்மதேசத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எண்கள் பொறித்த மைல் கல் கண்டறியப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் ஓர் ஊருக்குச் செல்லும் தொலைவு குறித்து மைல் கல் வைக்கப்படுவதுண்டு. இந்த மைல் கல் நடும் பழக்கம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கற்களில் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஊரின் பெயர்களையும், தொலைவு குறித்து தகவல்களை ரோமன் எண் மற்றும் தமிழ் எண் குறியீடுகளிலும் எழுதி உள்ளனர். அதற்கான சான்றுகள் வெகுசிலதான் உள்ளன.

திருநெல்வேலிமாவட்டம், அம்பாசமுத்திரம்-பிரம்மதேசம் செல்லும் சாலையில் கெளதமபுரி வண்டன் குளக்கரையில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் கண்டறியப்பட்டுள்ளது.

பிரம்மதேசம் வரலாறு: பண்டைய காலங்களில் சாலையோரங்களில் பயன்படுத்தப்பட்ட மைல் கல்களில் இதுவரை புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் 5 மைல் கல் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் தமிழ், ரோமன், அரபு எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள மைல் கல் இப்பகுதியின் அடையாளங்களுடன் காணப்பட்ட முதல் தமிழ் எண் மைல் கல் ஆகும்.

முதலாம் ராஜராஜ சோழர் ஆட்சி காலத்தில் பிரம்மதேசம் மிக முக்கியமான தளமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் 1850 ஆம் ஆண்டு வரை தாலுகா தலைமையிடமாகவும் இருந்துள்ளது. எனவே, பிரம்மதேசம் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். கண்டறியப்பட்டுள்ள மைல் கல் மூலம் ஆங்கிலேயர் ஆட்சியின் மிக முக்கியமான கட்டுமான கட்டமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் தொடங்கி பிரமதேசம் வரை இச்சாலையை அமைத்து முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது .

மைல் கல்லில் தமிழ் எண்:

பிரம்மதேசம், கெளதம புரியில் கண்டறியப்பட்ட இந்த மைல் கல் கல்வெட்டில் அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் “க ‘ எனக் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு நடப்பட்டுள்ள வண்டன்குளக் கரையிலிருந்து 2 ஊர்களும் நேர் எதிர் திசையில் 1 மைல் தொலைவு என ஒரு பக்கத்தில் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் மற்றும் பிரம்மதேசம் செல்வோருக்காக குறிப்பிட்ட இடைவெளியில் மைல் கல் நடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த வழியில் வேறு எங்கும் சாலை ஓரத்தில் இதுபோன்று தமிழ் எண்கள் பொறித்த வேறு கல்வெட்டுகள் அடையாளம் காணப்படவில்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த சாலை மிகவும் முதன்மை வாய்ந்த நெடுஞ்சாலையாக இருந்துள்ளதை இந்த மைல்கல் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

மைல் கல்லின் காலம் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை என்பதால் பிரம்மதேசம் தாலுகா தலைமையிடமாக இருந்த காலக் கட்டத்தில் அதாவது கி.பி 1850 க்கு முன்னதாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் சாலை அமைக்கப்பட்டபோது கிழக்கிந்திய கம்பெனியினரால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிய முடிகிறது.
மைல் கல்லின் சிறப்பு: தற்போது நடைமுறையிலுள்ள அரபு எண்களைப் பயன்படுத்தாமல் ரோமன், தமிழ் எண்களை மட்டுமே பயன்படுத்தி இந்த மைல் கல் பொறிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கக் காலத்தில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ரோமன் மற்றும் தமிழ் எண்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததற்கு இது மிக முக்கியமான சான்றாகும்.
மேலும், ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் எண்கள் அரசு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளதையும், பொதுமக்களும் தமிழ் எண்களையே பயன்படுத்தினர் என்பதையும் அறிந்து கொள்வதோடு தமிழ் எண்கள் சமீப காலமாகத்தான் புழக்கத்திலிருந்து அற்றுப்போயிருக்கிறது என்பதையும் தெளிவாக்குகிறது என்றார் அவர்.

சாலைப் போக்குவரத்தில் மைல் கல் பயன்பாடு 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததற்கான சான்றாக பிரம்மதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மைல் கல் உணர்த்துவதோடு பிரம்மதேசம் மன்னராட்சி காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் முக்கியமான நகரங்களில் ஒன்றாக இருந்துள்ளதற்கான சான்றாகவும் அமைந்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: