கீழடியில் பார்வையாளர்களுக்கு திடீர் தடை : 32 குழிகளைப் பார்க்கலாம்; 22 குழிகளைப் பார்க்க அனுமதியில்லை!

கீழடியில் பார்வையாளர்களுக்கு திடீர் தடை : 32 குழிகளைப் பார்க்கலாம்; 22 குழிகளைப் பார்க்க அனுமதியில்லை!

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டு, மதுரைக்கு அருகே அமைந்துள்ள கீழடியில், தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஜூன்15-ம் தேதி தொடங்கி தற்போது வரை தொடர்கிறது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தனித்த அடையாளத்தோடும், பண்பாட்டோடும் மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன. மேலும் சாதி, சமயங்கள் என்று எந்த அடையாளத்திற்கும் பிடி கொடுக்காமல், தமிழர் என்ற அடையாளத்தைப் பறைசாற்றும் விதமாக கீழடிச் சான்றுகள் உள்ளன.

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்னும் சில நாள்களில் நிறைவுபெற உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களும், தொல்லியல் ஆர்வலர்களும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில், கீழடியில் அதிகப்படியான கூட்டம் நிரம்பவும் பணியாற்றும் நபர்களுக்குத் தொந்தரவு ஏற்படுவதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை எஸ்பி ரோஹித்நாத், கீழடியைப் பார்வையிட்ட பின் சில கட்டுப்பாடுகளை விதித்துச் சென்றுள்ளார். அதில்,

  • கீழடி அகழாய்வுப் பணியைப் பார்வையிட 30 நிமிடங்களுக்கு 100 பேர் மட்டும் அனுமதிக்க வேண்டும்.
  • கீழடி அகழ்வாராய்ச்சியில், 32 குழிகளை மட்டுமே பார்வையிட அனுமதிக்க வேண்டும்.
  • அருகே மற்றொரு இடத்தில் 22 குழிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளைப் பார்வையிட பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினரை அனுமதிக்கக்கூடாது.
  • பள்ளி, கல்லூரிகளில் இருந்து பார்வையிட வந்தால், அனுமதிக் கடிதம் பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும்.
  • யாரும் குழிகளுக்கு மிக அருகில் செல்லக்கூடாது

எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக தொல்லியல்துறை மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார். கீழடியில் பாதுகாப்புப் பணியில் 20 காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பல கிலோ மீட்டர் பயணித்து வந்த தொல்லியல் ஆர்வலர்கள், முழுமையாக தொல்லியல் ஆய்வைப் பார்வையிட முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: