ராஜராஜ சோழனின் மனைவி தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வழங்கிய 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

ராஜராஜ சோழனின் மனைவி தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வழங்கிய 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டு கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 ஐம்பொன் சிலைகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரால் மீட்கப்பட்டன.

35 ஆண்டுகள் தஞ்சையை ஆட்சிபுரிந்த ராஜ ராஜ சோழன், தனது ஆட்சியின் 20-ம் ஆண்டில் பெரிய கோயிலை கட்டினார். 29-ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் ராஜ ராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவி, வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய 2 ஐம்பொன் சிவன் சிலைகளை கோயிலுக்கு வழங்கினார்.

பெரிய கோவிலில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன இச்சிலைகள், தற்போது தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூட அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோரை கொண்ட குழுவினர் தஞ்சாவூர் கலைக்கூடத்துக்கு வந்து, சுமார் 3 மணி நேரம் கலைக்கூடத்தில் ஆய்வு செய்த பிறகு, இந்த இரு சிலைகளும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சொந்தமானவை. இவை காணாமல் போனது தொடர்பாக தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் 2018-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காப்பாட்சியர் சிவக்குமாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, 2 சிலைகளையும் எடுத்துச் செல்ல சிவக்குமார் அனுமதித்தார். பின்னர், 2 சிலைகளையும் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். வரும் 10-ம் தேதி சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதி மன்றத்தில் 2 சிலைகளையும் ஒப்படைக்க உள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: