நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையில் சார்ப்பில் புகழஞ்சலி!

ஐயா நீதியரசர் எஸ். மோகனுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் (கோப்புப் படம்)

நீதியரசர் எஸ். மோகன் (Justice Shanmughasundaram Mohan) அவர்கள் பிறந்தது 1930ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிணொன்றாம் நாள்.

அவர் சென்னையில் புகழ் பெற்ற மாநில (பிரசிடென்ஸி – Presidency College) கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். வழக்குரைஞர் பட்டத்தினை சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.

ஐயா அவர்கள், 1954ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டார். 1966ம் ஆண்டு அரசு உதவி – வழக்குரைஞரானார். அரசின் சிறப்பு வழக்குரைஞராக 1967ம் ஆண்டும் அதனைத் தொடர்ந்து 1969ம் ஆண்டு அரசு வழக்குரைஞராக இருந்து வந்தார். மெட்ராஸின் அட்வகேட் ஜெனரலாக 1971ல் பதவியேற்ற அவர், 1974-ல் சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர் பெற்றும், அதனைத் தொடர்ந்து 01-08-1975 முதல் அதே சென்னை உயர்நீதி மன்றத்தில் நிரந்தர நீதிபதியாக பதியேற்றுக் கொண்டார். 1988ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதியன்று தற்காலிக தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அமர்த்தப்பட்ட அவர், நிரந்தர தலைமை நீதிபதியாக 1989ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதியில் நியமிக்கப்பட்டார். 26-10-1989ம் ஆண்டு கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியில் அமர்த்தப்பட்டார்.

ஐயா மோகன் அவர்கள் தற்காலிக கர்நாடக ஆளுநராகவும் இருந்துள்ளார். 1991ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் பென்ச்சிக்கு உயர்த்தப்பட்ட அவர், 10-02-1995ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற பின்னர் உலக கவிஞர்கள் அமைப்பிற்கு தலைவர் பதவியினை ஏற்றுக் கொண்டு தமிழுக்காக தொண்டாற்றினார். அவர் சார்ந்த வேளாளர் இனத்தின் பாண்டிய வேளாளர் சமூகத்தின் குத்து விளக்காக கடைசி வரை திகழ்ந்து, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அந்த சமூகம் இடம்பெற காரணமாகவும் இருந்தார்.

ஐயா நீதியரசர் எஸ். மோகன் அவர்கள் இன்று (27-12-2019) மாலை நம்மையெல்லாம் விட்டு பிரிந்தார். அன்னாருக்கு உலகத் தமிழர் பேரவையில் சார்ப்பில் புகழஞ்சலியை அமைப்பின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் செலுத்துகிறார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: