தமிழர்கள் அதிகம் வாழும் ஆசியாவின் மிக பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனாவால் 9 பேர் பலி!

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பை எப்படி கொரானா வைரஸ் பரவும் முக்கிய மையமாக மாறி இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300-ஐ கடந்துள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உயர் இடர்ப்பாடு மிக்க நபர்களை மும்பை மாநகராட்சி தேடிக் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டினர் பலர் பணி நிமித்தமாக மும்பை அன்றாடம் வருகின்றனர். அதைப் போலவே லட்சக்கணக்கான இந்தியக் குடிமக்கள் மும்பையில் இருந்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கின்றனர். இது போன்ற பயணிகளால் முதல் முதலாக மார்ச் மாதம் ஒரு நோயாளி மகாராஷ்டிர மாநிலத்தில் கண்டறியப்பட்டார். இப்போது இந்த தொற்று மாநிலத்தின் முழுக்க பரவிவிட்டது.

தாராவியில் கொரோனா பரவியது எப்படி?

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவி என்பது 2.1 சதுர கி.மி-ல் மட்டும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகின்றனர். இங்கு இப்போது 86 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளை நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என அரசு அறிவித்தது. ஆனால் வோர்லி, பிரபாதேவி, கோவாண்டி, சீட்டா கேம்ப், காலினா போன்ற பகுதிகளே நோய் அதிகம் பரவும் பகுதிகளாக உள்ளன.

வோர்லி கோலிவாடா, பிரபாதேவி சாவ்ல் பகுதிகளில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பிரபாதேவியில் உள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில் 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியில் கொரோனா தொற்றினால் ஒன்பது பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து மும்பை வந்த சிலருக்கு கொரோனா இருந்து அவர்கள் மூலமாகவே கிழக்கு மும்பையின் புறநகர்ப் பகுதிகளான சீத்தா கேம்ப், மான்குர்த், செம்பூர், கௌவன்டி, சிவாஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு கொரோனா தொற்று சென்றது. ஜெய் போலேநகர், விஷ்ணு நகர் பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் மூலமாகவே கொரோனா தொற்று பரவியது என்று மாநிலத்தின் சிறுபான்மையினர் நல அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

ஜெய்போலே நகரைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். இவர் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருந்து டாக்சியில் அழைத்து வந்தவர். விஷு நகர் பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்மணி உயிரிழந்தார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரது வீட்டில் வேலை செய்தவர். மும்பை மாநகராட்சி அந்தப் பகுதியை சீலிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தாராவியில் கொரோனா வைரஸ் எப்படிப் பரவியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் “வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய சில வெளிநாட்டினர் தங்களுடன் கொரோனா தொற்றையும் கொண்டுவந்தனர். இவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. வீட்டு தனிமைப்படுத்தல் செய்யப்பட்டபோது கூட அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். அவர்கள் வீடுகளில் வீட்டு வேலை செய்தவர்களுக்கு கொரோனா தொற்றியது. அவர்கள் தங்களது குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு அறியாமலேயே இந்த தொற்றினைப் பரப்பினர்” என மருத்துவம் குறித்து எழுதி வரும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அமோல் அன்னடேட்.

“குடிசைவாசிகளுக்கு கல்வியறிவு குறைவு என்பது மட்டுமல்ல, வறுமை காரணமாக நெருக்கடியான ஒரு அறையில் 10-15 பேர்கூட வாழ வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு உள்ளது. இங்கு ஒரு கக்கூசை சில இடங்களில் 500 பேருக்கு மேல் பயன்படுத்தி வரம் அவலம் உள்ளது. எனவே ஒருவருக்கு வைரஸ் தொற்றினால், அது மற்றவர்களுக்கு வேகமாகப் பரவுகிறது. சில சமூகங்களில் உள்ளவர்கள் தங்களுக்கெல்லாம் கொரோனா வராது என்று தவறாக குருட்டு நம்பிக்கையில் உள்ளனர். அதனால் முடக்கநிலைக் காலத்தில் அவர்கள் விதிகளை, அறிவுரைகளைப் பின்பற்றுவதில்லை,” என்று 35 ஆண்டுகளாக சையோன் தாராவி பகுதியில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் அணில் பச்சனேகர் தெரிவித்தார்.

தவறான புரிதல் காரணமாக கொரோனா பரவுகிறதா?

மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து பல தவறான கருத்துகளும், தகவல்களும், புரிதல்களும் இருந்ததால் அது வேகமாகப் பரவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“தனிமைப்படுத்திக் கொள்ளுதலையோ, சமூக இடைவெளியையோ மக்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை. அவர்கள் நோயை எளிமையாக எடுத்துக் கொள்கின்றனர். இந்த நோய் தங்களை ஏதும் செய்யாது என்று மக்கள் நினைக்கிறார்கள். கொரோனா பரவுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்” என்கிறார் மும்பை மாநகராட்சி துணை ஆணையர் கிரண் திகாவாகர்.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவி பகுதியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு திகாவாகருக்குத் தரப்பட்டுள்ளது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: