பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று!

பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று!

பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று!

உவமைக்கவிஞர் என்று எல்லோராலும் சிறப்பித்து அழைக்கப்படும் பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று. இத்தினத்தில் அவர் குறித்த ஒரு செய்தி தொகுப்பை பாக்கலாம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


தஞ்சை மாவட்டம் சிக்கல் எனும் கிராமத்தில், 1921ம் ஆண்டு திருவேங்கடம் – செண்பகம் அம்மையார் தம்பதிக்கு மகனாய் பிறந்தவர் சுரதா. இயல்பிலேயே தமிழ் மீதான பற்றால் ராஜகோபாலன் என்னும் தம் பெயரை, சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார் சுரதா. சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றுத் தேர்ந்தவர், பாரதிதாசனிடம் சீடனாகச் சேர்ந்து அவருடைய எழுத்துப் பணிக்கும் உதவினார்.

அக்காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் சுரதா. யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாத சுரதா, தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ் பெற்றதால், சிறுகதை எழுத்தாளர் ஜெகசிற்பியால், ‘உவமைக் கவிஞர்’ எனப் பாராட்டப்பட்டார்.

புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் 1955-ல் ‘காவியம்’ என்ற இதழையும் தொடங்கினார். மருது பாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தினார். நாணல், நீர்க்குமிழி என திரைப்படங்களில் இவரது கவி வரிகள் சிறந்து விளங்கின. ‘நீர்க்குமிழி’ படத்தில் வரும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல் மனித வாழ்க்கையை துள்ளியமாக விவரித்தது.

1942-ம் ஆண்டுவாக்கில், பாரதிதாசன் இயற்றிய நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்து அசத்திய சுரதா, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலா கவியரங்கம், படகு கவியரங்கம் என கவியரங்க நிகழ்ச்சிகளை முதன்முதலில் நடத்தி இளைஞர்களைக் கவிதை பக்கம் சாய்த்தவர்.

1944-ல் ‘மங்கையர்கரசி’ என்னும் திரைப்படத்துக்கு உரையாடல் எழுதினார். இந்தத் திரைப்பட உரையாடல்தான், ஒரு திரைப்படத்தின் கதை, வசன நூலாக முதன்முதலில் வெளிவந்தது. இதன்மூலம், குறைந்த வயதில் ‘முதன்முதலில்’ திரைப்பட உரையாடலை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

தமிழக அரசு, ‘முதன்முதலில்’ ஏற்படுத்திய பாவேந்தர் விருதைப் பெற்றவரும், 20-ம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முதன்முதலில் ராஜராஜன் விருதைப் பெற்றவரும் சுரதாதான்.

‘சாவின் முத்தம்’, ‘சுவரும் சுண்ணாம்பும்’, ‘துறைமுகம்’, என இவரது படைப்புகள் அறியாத பல்கலைக்கழகங்களே இல்லை என்னும் அளவுக்கு உவமைக்கவிஞர் சுரதாவின் படைப்புகளும் காலம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

கவியரங்குகளுக்கு புது வடிவம் கொடுத்த ‘உவமைக் கவிஞர்’ சுரதா பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

  1. தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) 1921-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றார். பாவேந்தர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்று கொண்டவர்.
  2. பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘சுப்புரத்தினதாசன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். இதன் சுருக்கமான ‘சுரதா’ என்ற பெயரில் இலக்கியப் படைப்பாளியாக பரிணமித்தார்.
  3. செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் ‘உவமைக் கவிஞர்’ என போற்றப்பட்டார். பாரதி தாசனை 1941 ஜனவரியில் சந்தித்தார். அவருடன் சில காலம் தங்கியிருந்து, அவரது கவிதைகளைப் படியெடுத்தல், அச்சுப் பணி, நூல் வெளியீடு போன்றவற்றில் உறுதுணையாக இருந்தார்.
  4. ‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்துக்கு 1944-ல் வசனம் எழுதினார். ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்பது போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.
  5. புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது பல சிறுகதைகள் எழுதினார். ‘சிவாஜி’ இதழில் கவிதைகள் எழுதினார். இது பின்னர் கவிதைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  6. முதல் நூலான ‘சாவின் முத்தம்’ 1946-ல் வெளிவந்தது. 1955-ல் ‘காவியம்’ என்ற வார இதழைத் தொடங்கினார். ‘இலக்கியம்’, ‘ஊர்வலம்’, ‘விண்மீன்’, ‘சுரதா’ என பல கவிதை இதழ்களை வெளியிட்டார். நடிகைகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் ஆனந்த விகடன் இதழில் 1971-ல் வெளிவந்த இவரது கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
  7. உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கியவர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்குகளை தலைமையேற்று நடத்தியவர். வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் என புதுமையான கவியரங்குகளை நடத்தி இளைஞர்களிடம் கவிதை ஆர்வத்தை ஏற்படுத்தினார்.
  8. யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர். இவரது கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மருதுபாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  9. தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றவர். மலேசியாவில் 1987-ல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
  10. இவரது தமிழ்த் தொண்டை கவுரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்திய பெருமைக்கு உரியவர். கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ‘உவமைக் கவிஞர்’ சுரதா 85-வது வயதில் (2006) மறைந்தார்.
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: