திராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததிற்க்கு அண்ணாவிடம் வாதாடிய ‘சண்டே அப்சர்வர்’-ரின் பி.பாலசுப்பிரமணியம்!

திராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததிற்க்கு அண்ணாவிடம் வாதாடிய ‘சண்டே அப்சர்வர்’-ரின் பி.பாலசுப்பிரமணியம்!

திராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததிற்க்கு அண்ணாவிடம் வாதாடிய ‘சண்டே அப்சர்வர்’-ரின் பி.பாலசுப்பிரமணியம்!

1944ஆம் ஆண்டு சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரானது ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணல் தங்கோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தது நாம் அனைவரும் அறிந்த செய்தியாகும். இதற்கு மற்றொரு தமிழராகிய சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் என்பவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது நாம் அறிந்திடாத செய்தியாகும். இது குறித்து அண்மையில் வெளி வந்த ஒரு நூலில் ஆதாரங்களோடு குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


விகடன் பிரசுரம் வெளியிட்ட அந்த நூலின் பெயர் “அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம்”. நூலின் ஆசிரியர் செ.அருள் செல்வன். இவர் அண்ணல் தங்கோவின் பெயரன் ஆவார். இவரின் முந்தையது “தூய தமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ” நூலாகும். அந்நூலில் அண்ணல் தங்கோ அவர்கள் திராவிடர்கழகம் எனப் பெயரிடப்பட்டதை கண்டித்து ‘தமிழர் கழகம்’ என்று இயக்கத்திற்கு பெயர் சூட்டப்பட வேண்டுமென்று வாதாடியதை எழுதியிருப்பார். அதேபோல் சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம் என்பவரும் அண்ணாவோடு வாதிட்ட செய்தியை ‘அண்ணாவின் அரசியல் குரு பி.பாலசுப்பிரமணியம்’ நூலிலும் பதிவு செய்துள்ளார்.

சண்டே அப்சர்வர் என்பது ஆங்கில நாளேட்டின் பெயராகும். இதை நீதிக்கட்சி பிரமுகர் பி.பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்தி வந்தார். பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, ஆகியவற்றை உள்ளீடாகக் கொண்டது. ஜின்னா, அம்பேத்கர் ஆகியோர் இவ்வேட்டின் தீவிர வாசிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாநாட்டிற்கு முந்தைய நாள் அண்ணாவோடு பி.பாலசுப்பிரமணியம் நடத்திய உரையாடல், அதற்கு அண்ணா அளித்த தவறான மறுமொழி, அதன் மூலம் அண்ணாவின் பாகுபாட்டை வெளிக்காட்டும் இன உணர்ச்சி ஆகியவற்றை அண்ணா எழுதிய ‘திராவிட நாடு’ இதழ் கொண்டே அம்பலப்படுத்தியுள்ளார் அருட்செல்வன்.

இனி அண்ணா ‘திராவிடநாடு’ இதழில் எழுதியுள்ளதை காண்போம் :

”மாநாட்டுக்கு முன்னாள் மாலை சேலம் சென்றேன். ஏற்கெனவே அங்கு தோழர்கள் பாண்டியன், வி.வி.இராமசாமி, சண்டே அப்சர்வர் ஆசிரியர், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் வந்திருந்தனர்…. அந்த சமயம் நண்பர் பாலசுப்பிரமணியம் சொன்னது ஒன்று தான். அதாவது ஆந்திரர், கேரளர் ஆகியோரின் கருத்து தெரியாமல் எப்படிப் பெயரை மாற்றுவது என்பது தான்.” ஆந்திர நாடு செல்லக் கூடிய தாங்களும் கேரளம் செல்லக்கூடிய நண்பர் நெட்டோ அவர்களும் இதைச் செய்திருக்க வேண்டும். இனியேனும் செய்யுங்கள், அதை விட்டு தமிழ்நாட்டிலே வேலை செய்யும் எங்களைத் தாக்க இதனையும் சாதகமாக்குகிறீர்களே? சரியா என்று நான் கேட்டேன். புன்னகையைத் தான் ‘சண்டே அப்சர்வர்’ பதிலாகத் தந்தார். நண்பர் நெட்டோ அவர்கள் ‘எனக்கு மலையாளம் மறந்தே போச்சே’ என்றார்!” (க.திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு தொகுதி 2) மேற்படி அண்ணாவிடம் வாதம் நடந்த போது அண்ணா குறிப்பிடுவது போல் பெயர் மாற்றுவது பற்றி பேச்சு நடந்துள்ளது. பி.பா. அவர்கள் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் எனப் பெயரிட வேண்டுமானால் தமிழர்களையும் சேர்த்து இதர திராவிடர்களான ஆந்திர, கன்னட, கேரள மக்களின் கருத்து தெரியாமல் எப்படி திராவிடர் கழகம் என பெயர் மாற்றுவது? கருத்தும் ஏற்பிசைவும் இன்றி எப்படி பெயரை சூட்ட இயலும்? எனவே தமிழர் கழகம் என்று பெயர் சூட்டுவது தான் ஏற்புடையதாக இருக்கும் என்று ஆணித்தரமாகவே வாதிட்டுள்ளார் என யாராலும் யூகிக்க இயலும். அதனால்தான் மேற்படி அண்ணா ஆந்திரா செல்லக் கூடிய தாங்களும் (இங்கு தாங்களும் என அண்ணா பி.பா.வைத்தான் குறிப்பிடுகின்றார். பிறப்பால் தமிழரான பி.பா. நெல்லூரில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை அங்கு முடித்தவர்) அடுத்து கேரளா செல்லும் நண்பர் அவர்களும் (பிறப்பில் மலையாளியான நெட்டோ ஒரு சிறந்த வழக்கறிஞரும் பெரியார் பற்றாளாரும் ஆவார்.) இதைச் செய்திருக்க வேண்டுமல்லவா என எதிர்க் கேள்வி கேட்டுள்ளார். இந்த வாக்குவாதம் எப்படிச் சென்றுள்ளது என்பதை நோக்கும் போது, பிறப்பால் தமிழரான நெல்லூரில் வளர்ந்த பி.பா. ஆந்திரா முழுவதும் சென்று கருத்துப் பரப்புரை செய்து ஆந்திரத் திராவிடர்கள் அனைவரின் ஆதரவும் பெற வேண்டுமாம். அதே போல் பிறப்பால் மலையாளியான நெட்டோ தனது பூர்விகமான கேரளம் சென்று கேரளத் திராவிடர்கள் அனைவரின் ஆதரவு பெற வேண்டுமாம். இதைத் தான் அண்ணா எதிர்பார்க்கிறாரா?

அண்ணாவின் வாதத்தில் மற்றொரு விபரீதம் உள்ளது. /அதை விட்டு, தமிழ்நாட்டிலே வேலை செய்யும் எங்களைத் தாக்க இதனையும் சாதகமாக்குகிறீர்களா? சரியா என்று நான் கேட்டேன். புன்னகையைத்தான் சண்டே அப்சர்வர் பதிலாகத் தந்தார்/ எனக் குறிப்பிடுவதில் ஒரு பெரும் முரண்பாடுள்ளது. ஒரே அமைப்பில் ஒரே கொள்கையின் கீழ் செயல்பட்டு வரும் போது ‘தமிழ்நாட்டிலே வேலை செய்யும் எங்களையும் தாக்க’ என அண்ணா அவர்களிடமிருந்து தம்மை (பெரியாருடன் சேர்த்து தான்) தனிமைப்படுத்திக் கொண்டு அவர்களை பிரித்து விட ஏன் முயற்சிக்கிறார் என நமக்கு விளங்கவில்லை.

கட்டமைக்கப்பட்டு வரும் ஒரு இயக்கத்தின் முன்னோடிகளிடம் கருத்து வேறுபாடுகள் வருவதும், அதை வாக்குவாதம் மூலம் வெளிப்படுத்தி, பின்னர் ஒருமித்த ஓர் இறுதிக் கருத்து நிலைக்குக் கொண்டு வருவதுதான் இயல்பு. ஆனால் இயல்பு நிலையை மீறி ‘எங்களைத் தாக்க’ எனக்கூறி, அவர்களிடமிருந்து பிரித்துப் பேசுவது, இங்கு அண்ணாவின் நிலை நீதி தேவன் மயக்கம் போல நமக்கு மயக்கம் தருகிறது.

சரி, நானும் உங்களிருவருடன் இணைந்து ஆந்திர, கேரள, மாநிலத்திற்கு வருகை புரிந்து பெயர் மாற்றப் பிரச்சாரத்திற்கான அவர்களின் ஆதரவை நாடுகிறேன் என அண்ணா கூறியிருக்கலாமே? அது ஏற்புடையதாக இருந்திருக்குமே!… என்று இந்நூலாசிரியர் அருள்செல்வன் குறிப்பிடுகிறார். அண்ணாவை ‘நாம்’ என்று சொல்லவிடாமல் பிரித்து தடுத்த உணர்ச்சி என்பது ‘தெலுங்கு உணர்ச்சி’ தான் என்பதை மறைமுகமாக சுட்டாமல் நேரடியாகவே சுட்டியிருக்கலாம். பல உண்மைகளை வெளி கொணர்ந்திருக்கும் இந்த நூலினை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: