ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் அருகே சேதுபதி கால கோட்டைப் பகுதியினுள் பாண்டியர் கால கோட்டை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், இங்கு தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறியச் செய்யும் மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்திவருகிறது. நான்காவது மரபுநடை, ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை ஆறுமுகக்கோட்டையில் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அமைப்பின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் சோ.ஞானகாளிமுத்து ஆகியோர் அக்கோட்டையை ஆய்வுசெய்தனர். அப்போது, கோட்டைக்குள் உள்ள குளத்தின் கரையில் பிற்காலப் பாண்டியர் கால செங்கல் கோட்டையின் சுவர்கள் புதைந்திருப்பது கண்டறியப்பட்டது.

“ராமநாதபுரம் சேதுபதி மன்னர் முத்து விஜயரகுநாத சேதுபதி (கி.பி.1711 – கி.பி.1725), ஃப்ரெஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடையில் ஒரு கோட்டையைக் கட்டியுள்ளார். இது, அறுங்கோண வடிவில் உள்ளதால் ஆறுமுகக் கோட்டை என்கிறார்கள். செங்கல், சுண்ணாம்புச் சாந்து கொண்டு இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் வெளியே, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் வண்ணம் பூசப்பட்ட, வழுவழுப்பான, சிறிய மற்றும் பெரிய அளவிலான கறுப்பு சிவப்பு, சிவப்பு கறுப்பு நிற பானை ஓடுகள், இரும்புத்தாதுக்கள், சங்குகள், பானை தாங்கிகள், தேய்ப்புக்கற்கள் ஆகியவை ஏராளமாக சிதறிக்கிடக்கின்றன. கோட்டையின் கிழக்குப் பகுதியில், முதுமக்கள் தாழிகளின் ஓடுகள் உள்ளன. எனவே, இக்கோட்டையின் உள்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் பெருங்கற்காலம், சங்ககாலம் முதல் மக்கள் குடியிருப்பாகவும், இடுகாடாகவும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

இக்கோட்டைக்குள் முனீஸ்வரர், கருப்பசாமி கோயில், குளம் ஆகியவை உள்ளன. இக்குளத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் புதைந்தநிலையில் செங்கல் கட்டுமானம் உள்ளது. இதில், செங்கற்களை இணைக்க களிமண் சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்செங்கற்கள், நீளம் 23 செ.மீ., அகலம் 13.5 செ.மீ., உயரம் 5 செ.மீ எனும் அளவில் உள்ளன. இவை, இடைக்காலத்தைச் சேர்ந்த செங்கல் அளவில் உள்ளன. இக்கட்டுமானம் பிற்காலப் பாண்டியர்களால் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையின் அடிப்பகுதியாக இருக்கலாம். மேலும், இக்கோட்டையின் பெயரில் இங்கு ஓடும் ஆறு, கோட்டைக்கரை ஆறு என அழைக்கப்படுவதாலும், சங்க காலப் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாலும், இங்கு சங்க காலம் முதல் கோட்டை இருந்திருக்கலாம். தொல்லியல் துறையினர் இங்கு அகழாய்வு செய்தால், மேலும் பல வரலாற்றுத் தகவல்கள் தெரிய வரும். எனவே, அரசு இங்கு தொல்லியல் ஆய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: