மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம் நடந்தது என்ன?

மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம் நடந்தது என்ன?

சில தமிழக அரசியல்வாதிகள், ஈழப் போராளிகள் தமிழகத்தில் அராஜகம் செய்தனர் என்பதற்கு சான்றாக குறிப்பிடும் சம்பவங்களில் ஒன்று இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம்.

இது பற்றிய உண்மைகள் முழுவதும் சில அரசியல் தலைவர்களுக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியாது. இச்சம்பவம் பற்றிய உண்மைகளை இங்கு காண்போம்.

02.08.1984 ல் சென்னை விமான நிலையத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 33 பேர் கொல்லப்பட்டார்கள். 27 பேர் காயம் அடைந்தார்கள். இறந்தவர்கள் பெரும்பாலும் சிங்கள பயணிகளாயினும், தமிழகத்தில் நடந்த முதல் பெரிய வெடிகுண்டு சம்பவம் என்பதால் இது மக்கள் மத்தியில் கடும் அதிர்வை எற்படுத்தியிருந்தது.

அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார். இதனை செய்தது ஈழ விடுதலை இயக்கம் என்பதை தெரிந்தும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமையிலான “தமிழீழ தேசிய இராணுவம்” (TEA) ஆகும். இந்த வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து ஒரு வாரத்தில் வெடிகுண்டு சம்பவத்தின் சூத்திரதாரியான தம்பாபிள்ளை மகேஸ்வரனும் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்யும்போது முழு உண்மைகளையும் காவல் துறையினர் தெரிந்து கொண்டனர்.

அதாவது சென்னையில் இருந்து செல்லும் இலங்கை விமானத்தில் அந்த வெடி குண்டு அனுப்ப இருந்தது என்றும், கொழும்பில் அது இறங்கி சுமார் அரை மணி நேரத்தின் பின்பே குண்டு வெடிக்க இருந்தது என்றும் அதற்கு ஏற்ப நேர குண்டாக அது செய்யப்பட்டது என்பதையும் அறிந்து கொண்டனர்.

மகேஸ்வரன் அவர்களின் நோக்கம் இலங்கையில் குண்டு வெடித்து இலங்கை அரசுக்கு பொருளாதார இழப்பு வரவேண்டும் என்பதேயொழிய, சென்னை விமான நிலையத்தில் வெடிக்க வைப்பதோ அல்லது பயணிகளைக் கொல்வதோ நோக்கமாக இருக்கவில்லை.

மகேஸ்வரன் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் ஒரு உயர் அதிகாரியிடம் இது பற்றி பேசி அவரும் தான் வெடிகுண்டை கொழும்பிற்கு அனுப்ப உதவி செய்வதாக கூறி லஞ்சமாக பணமும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அந்த உயர் அதிகாரி கூறியபடி மகேஸ்வரனே விமான பயண ரிக்கட்டுடன் குண்டு அடங்கிய பயண சூட்கேசையும் கொண்டு சென்றார். ஆனால் அங்கு வாக்குறுதியளித்தபடி அந்த உயர் அதிகாரி நிற்காமல் ஏமாற்றிவிட்டார். இதனால் வேறு வழியின்றி சூட்கேசை அப்படியே விமான நிலையத்தில் வைத்துவிட்டு, மகேஸ்வரன் திரும்பி வரவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

வெளியே வந்த மகேஸ்வரன் உடனடியாக தொலைபேசி மூலம் சுங்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் விவரத்தை கூறியுள்ளார். அவர்களும் சென்று பெட்டியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வேறு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சென்றுவிட்டனர்.

அவர்கள் அஜாக்கிரதையாக இருப்பதை கண்ட மகேஸ்வரன் மீண்டும் விமான நிலைய சுங்க துறையினருக்கு தொலை பேசி மூலம் குண்டு வெடிக்கப் போகிறது என்ற செய்தியை கூறியுள்ளார்.

சுங்க அதிகாரிகள் சென்று பெட்டியை தூக்கி பார்த்து “நல்ல கனமாக இருக்கிறது. அவ்வளவும் தங்க கட்டிகளாக இருக்கும், ஆட்கள் எல்லாம் போன பின்பு எடுத்து நைசாக தமக்குள் பங்கு போட்டுக் கொள்ளலாம்” என்று ஒரு ஓரத்தில் பெட்டியை மறைத்து வைத்துவிட்டார்கள்.

இவ்வாறு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையாலும், தவறாலுமே சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடித்தது. இலங்கை விமானத்திற்கு ஏற வந்த சிங்கள பயணிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த உண்மைகள் அனைத்தும் காவல் துறையினர் மூலம் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே அதிகாரிகளை ஏசிவிட்டு மகேஸ்வரனை ஜாமீனில் விடுதலை செய்யும்படி அறிவுறுத்தினார். ஜாமீனில் வெளியே வந்த மகேஸ்வரன் தொடர்ந்தும் இயங்கினார். ஆனால் அவரது இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டு அவரும் இயங்காமல் இருந்த வேளை 1997-ம் ஆண்டு சென்னையில் அவர் கைது செய்யப்பட்டு இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு வழக்கு விசாரிக்கப்பட்டது.

வழக்கில் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். இறுதியாக அவர் 13 வருட சிறைவாசத்திற்கு பின்பு 2010-ம் ஆண்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

லண்டனில் படித்தக் கொண்டிருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தமிழ் மக்களுக்கு போராடுவதற்காக லண்டன் வாழ்வை உதறிவிட்டு வந்தவர். பனாகொடை வெலிக்கடை சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர். இந்தியாவை நம்பினார், அதனால் ஏமாந்தார். அவர் நம்பிய இந்தியாவே அவரை பழிவாங்கிவிட்டது.

நன்றி  – Balan Chandran

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: