சங்ககால மன்னன் குமணன்!

சங்ககால மன்னன் குமணன்!

சங்ககால மன்னன் குமணன்!

குமணன் சங்ககால மன்னன். முதிரம் இவன் நாடு. இவன் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவன். இவனது தம்பி இளங்குமணன்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையில் இருக்கிறது குமணமங்கலம் (கொமரலிங்கம் என்பது தற்போதைய பெயர்). இப்பெயர் இப்பகுதியை ஆண்ட குமணனின் பெயரால் துலங்குகிறது. முதிரமலை என்பது இதனுடைய பழைய பெயர். குமணன் இயற்றமிழை வளர்த்த புலவர்களையும் இசைத்தமிழை வளர்த்த பாணர்களையும் நாடகத்தமிழை வளர்த்த கூத்தர்களையும் புரந்தான். அவர்களுக்கு பொன்னையும் பொருளையும் கொடையாகக் கொடுத்தான். இதனால் குமணனின் புகழ் பரவியது. இதனைக் கண்டு குமணனுக்குத் தம்பியான இளங்குமணன் பொறாமை கொண்டான். இதனை அறிந்த குமணன், போரைத் தவிர்த்து தன்னுடைய நாட்டை இளங்குமணனிடம் ஒப்படைத்துவிட்டு, நண்பர்களோடு காட்டிற்குச் சென்றுவிட்டான். ஆனால் இளங்குமணனோ தன் அண்ணனை ஒழிக்க நினைத்தான். எனவே, ‘குமணன் தலையை கொய்துகொண்டு வருபவர்களுக்கு ஆயிரம்பொன் பரிசு’ என இளங்குமணன் அறிவித்தான். இந்நிலையில் குமணனிடம் கொடை பெற்றுச் செல்வதற்காக பெருந்தலைச்சாத்தனார் என்னும் புலவர் முதிர மலைக்கு வந்தார். நடந்தவைகளை அறிந்தார். பெருஞ்சித்திரனாருக்கு யானையைப் பரிசளித்த வள்ளல் குமணனின் நிலையை எண்ணி இரங்கினார். குமணனைத் தேடி காட்டிற்கு சென்றார். அவனைச் சந்தித்தார். குமணனனோ புலவருக்கு எதனைக் கொடையாகக் கொடுப்பது எனத் தெரியாது தவித்தான். அப்பொழுது அவன்தன் தம்பியின் ஆணை நினைவிற்கு வந்தது. தன்னுடைய உடைவாளை எடுத்து புலவரிடம் கொடுத்தான். தனது தலையைக் கொய்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து ஆயிரம் பொன்களைப் பரிசாகப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினான். புலவர் குமணனின் வாளை எடுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து அகன்றார்.

புலவர் மறுநாள் குமணனின் தலையை ஒரு கையிலும் அவனது வாளை மறுகையிலும் ஏந்திக்கொண்டு இளங்குமணனின் அரண்மனைக்குச் சென்றார். குமணன்னின் கொய்யப்பட்ட தலையைக் கண்ட இளங்குமணன், புலவரின் வறுமையை நீக்க தனது தலையையே கொடுத்த குமணன் பெருமையை எண்ணி, தன்னுடைய தவறை உணர்ந்து அழுது புலம்பினான்; தற்கொலை செய்துகொள்ள முயன்றான். அம்முயற்சியைத் தடுத்த புலவர், “குமணன் சாகவில்லை. இது செவ்வாழைத் தண்டால் செய்யப்பட்ட போலித்தலை. உன்னைத் திருத்துவதற்காக நான் செய்தது” எனக் கூறினார். பின்னர் இளங்குமணன் காட்டிற்குச் சென்று தன் அண்ணன் குமணனை அழைத்துவந்து ஆட்சியை ஒப்படைத்தான்.

புறநானூறு தரும் பாடல் வாரியான செய்திகள்

குமணன் கடையெழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்தவன்.

குமணன் மேம்பட்ட குடியில் பிறந்தவன்.

நண்பர் சூழ முதிரமலைப் பகுதியில் வாழ்ந்தவன்.

மார்பில் சந்தனம் பூசிக்கொண்டு மகளிர் மகிழ்வு தர வாழ்ந்து வந்தான். முரசு முழங்கும் அவன் வளமனைக்கு வரும் அவனது குடிமக்கள் பெருஞ்செல்வம் பெற்று மகிழ்ந்தனர். இவனது வாள்-படை மிகவும் பெரியது.

இவன் வழங்கும் கொடையானது கொடையைப் பெற்றவர் பிரருக்கெல்லாம் வழங்கி மகிழும் அளவுக்கு மிகுதியாக இருந்தது.

அவ்வப்போது பசுமையான கோலை வளைத்துச் செய்துகொண்ட யாழை மீட்டிப் பாடும் வயிரியரின் வறுமையைப் போக்கும் குடியில் பிறந்தவன்.

பாடுவோருக்கெல்லாம் யானைகளைப் பரிசிலாக வழங்கி மகிழ்ந்தவன் இவன். இவனைப் பெருந்தலைச் சாத்தனார் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்த காலத்தில் பாடினார். அவன் தன் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய்த் தன் தம்பியிடம் கொடுத்து அதன் விலையாக அவன் தரும் பரிசிலைப் பெற்றுக்கொள்ளும்படி வாளைப் புலவருக்கு வழங்கினான்.

சிவாலயம் :

குமணன் என்பவன் பழனிமலைத் தொடரினை ஆண்டு வந்த அரசனாவான். இவன் முதிரம் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவன் குறுநில மன்னனாவான். கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிற்பட்டவன் என்பதும், தலையேழு வள்ளல்களில் ஒருவன் என்பதும் செய்தியாகும். பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையே குமணமங்கலம் என்று ஊர் இவரது பெயரில் அழைக்கப்படுகிறது. கொமரமங்கலம் காசி விசுவநாதர் கோயில் என்பதை இவர் உருவாக்கினார். மன்னர் காசிக்கு சென்று காசி விசுவநாதரை தரிசித்து வந்தார். தன்னுடைய மக்களுக்கும் காசிக்கு சென்று வழிபட முடியாது என்பதால் அங்கிலிருந்து சிவலிங்கத்தினை பெற்று தன்னுடைய ஊரிலேயே காசிவிசுவநாதருக்கு கோயில் அமைத்தார். அம்மன்னருடைய பெயரே ஊரின் பெயரானது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: